Monday, December 20, 2010

தமிழ்

தமிழ்ச் சமூக வரலாற்றையும், இந்திய சமூக வரலாற்றையும் வரலாற்றறிஞர்களும், வரலாற்றாய்வாளர் எனக்கூறிக் கொள்வோரும் தங்கள் சொந்த விருப்பத்திற்கேற்ப மனம் போன போக்கில் புனைந்து வருகின்றனர். தொல்பொருள் தடயங்களுக்கு, தொல்லியல் அறிஞர்கள் கூறும் விளக்கங்களை இவர்கள் முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு அமைந்த தொல்லியல் அறிஞர்களின் விளக்கங்களை மட்டுமே, பெரும்பாலும் இவ்வரலாற்றறிஞர்கள் கணக்கில் கொள்கின்றனர். இத்தகைய போக்கினை தமிழக (தென் இந்திய) வரலாற்றாய்வாளர்களிடையே அதிக அளவில் காணமுடிகின்றது. இதன் விளைவாக, பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்ச் சமூக வரலாறு பல புதிர்களை உள்ளடக்கியதாக உள்ளது. தொல்லியல் தடயங்கள் கூறும் செய்திகளை முமுமையாகக் கணக்கிலெடுத்துக்கொண்டு விருப்பு, வெறுப்பற்ற நிலையில் தமிழ்ச் சமூக வரலாற்றை எழுத முயற்சிப்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கமாகும். பண்பாட்டு மானுடவியலில் முற்றிலும் புதிய கோட்பாடு ஒன்று இங்கு முன்வைக்கப்பட உள்ளது. எனவே சற்று விரிவாக எழுதவேண்டிய தேவையைக் கருதி இதனை ஒரு தொடராக எழுதுகிறேன்.

1.1. தமிழ்மொழி தோன்றியபொழுதே செம்மொழியான விந்தை:

கி.மு.300-கி.பி.200 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சங்ககால பாடல்கள், இலக்கிய, இலக்கண வளம் நிறைந்ததாக காணப்படுகின்றன. இக்காலக் கட்டத்தில் தமிழ் எழுத்திற்கும், சொல்லிற்கும் மிகத்தெளிவான இலக்கணம் வகுக்கப்பட்டுவிட்டதை தொல்காப்பியம் மூலம் அறியமுடிகின்றது. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சமகாலத்தில் உலகில் பேசப்பட்ட அனைத்து செம்மொழிகளுக்கும் நிகராக தமிழ்மொழி விளங்கியது என்பதை அறுதியிட்டு கூறமுடியும்.

மனிதகுல வரலாற்றில் உலோகப் பயன்பாடு தோன்றி அரசு நிலை கொண்ட பின்னரே மொழியைச் செம்மைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உலகில் முதன்முதலில் மருதநில வாழ்க்கைத் தோன்றிய சுமேரியாவில், ஊருக் நகரில் கி.மு.3400 வாக்கில் ஏறத்தாழ 700 குறியீடுகளைக் கொண்டிருந்த எழுத்துமுறை புழக்கத்தில் இருந்ததை அறியமுடிகின்றது. இக்காலக் கட்டத்தில், சுமேரியாவிலும் அதன் அண்டைப் பகுதிகளிலும் நிலையான பல நகர அரசுகள் வாழ்ந்தன. அந்நகர மாந்தர் செம்பு பயன்பாட்டுடன் கூடிய நீர்ப்பாசன, விவசாய வாழ்வை மேற்கொண்டிருந்தனர். கி.மு.2900ல் அதே சுமேரிய பகுதியில் நில பிரபுத்துவ அரசுகள் பல தோன்றிய நிலையில், கூனிபார்ம் (ஆப்பு எழுத்து) என அழைக்கப்பட்ட எழுத்துமுறை தோன்றியது. அக்காலக் கட்டத்தின் மேற்காசியாவில் பல்வேறு அரசுகளில் வாழ்ந்த, பல்வேறு மொழி பேசிய மக்களும் 'கூனிபார்ம்' எழுத்து முறையையே பயன்படுத்தினர். இவ்வெழுத்து முறையின் அடுத்தக் கட்ட வளர்ச்சியான நவீன காலத்தில் நாம் பயன்படுத்தும் நெடுக்கணக்கு (alphabet) எழுத்துமுறை, பாலஸ்தீனப் பகுதியில் அமைந்திருந்த கானன் தேசத்தில் கி.மு. / 600 வாக்கில் தோன்றியது. மொழி வளர்ச்சியில் பூர்வ குடிகளாகக் கருப்பர்கள் வாழ்ந்த மேற்காசியா இத்தகையை நீண்ட நெடிய வரலாற்றினைக் கொண்டிருந்த போதும் இக்காலக்கட்டத்தில் அங்கு பேசப்பட்ட மொழிகள் எதுவும் செம்மொழிகளாகப் பரிணமித்து விடவில்லை. அதன்பின் இப்பண்டைய மேற்காசிய (சுமேரிய) பண்பட்ட குடிகளுடன் உறவுகொண்டு அப்பண்பாடுகளைத் தமதாகச் சுவீகரித்துக்கொண்ட, வெள்ளையினக் குடிகளின் மொழிகளான ஹீப்ரூ, கிரேக்கம், லத்தீன், அரேபியம் போன்ற மொழிகள் மிகவும் பிற்காலத்தில் செம்மொழிகளாகப் பரிணமிக்கும் வாய்ப்பைப் பெற்றன.

சமஸ்கிருதம் சார்ந்த மக்கள் இந்தியாவிற்குள் குடியேறும் முன் ஈரான் (பண்டைய எல்லாமைட்) பகுதியில் பல நூற்றாண்டுகள் வாழ நேர்ந்ததால், அம்மொழியும் மேற்காசிய மொழி வல்லுநர்களின் துணையுடன் செம்மொழியாகப் பரிணமித்துவிட்டது. மேற்காசியாவுடன் நேரடித் தொடர்பில்லாத சீன மக்கள், ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகள் நிலையான அரசுகளுடன் கூடிய மருதநில வாழ்க்கையை மேற்கொண்ட பின்பே சீன மொழி செம்மொழியாகப் பரிணமித்தது.

இச்செம்மொழிகளுக்கெல்லாம் விதிவிலக்காக தமிழ்மொழி உள்ளது. தொன்றுதொட்டு தமிழகத்திலேயே வாழ்ந்து வந்த பூர்வகுடி மக்களாலேயே சங்க காலத் தமிழ்ச் சமூகம் தோற்றுவிக்கப்பட்டதாகத் தமிழக வரலாற்றாய்வாளர்கள் நம்புகின்றனர். ஆனால், தமிழகத்தில் வாழ்ந்த பூர்வகுடி மக்களோ, கி.மு.800க்கு முன் உலோகப் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை. தென்தமிழ்நாட்டில் வாழ்ந்த பூர்வகுடிமக்கள் கி.மு.4000லிருந்து சிறுகற்காலப் பண்பாட்டு மட்டத்திலும், பிற பகுதிகளில் வாழ்ந்த பூர்வகுடி மக்கள் கி.மு.1800லிருந்து புதிய கற்காலப் பண்பாட்டு மட்டத்திலும் வாழ்ந்து வந்ததைத் தொல்பொருள் தடயங்கள் மூலம் அறியமுடிகின்றது. இவ்விரு பண்பாட்டுக் குடிகளும் மிக எளிமையான பொருளியல் வாழ்க்கையையே மேற்கொண்டிருந்தனர். மொழி வளர்ச்சிக்கான எந்தவிதமானத் தடயங்களையும் இப்பண்பாடுகளில் காண முடியவில்லை. இத்தகைய எளிய மேய்ச்சல் வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மக்களிடம் மொழி வளர்ச்சி தோன்றியிருக்கக்கூடும் என எதிர்ப்பார்ப்பது அறிவியலுக்கு முற்றிலும் புறம்பானதாகும். அறிவுப்பூர்வமாகச் சிந்தித்தால், கி.மு.800க்கு முன் தமிழகம் முழுவதும் வாழ்ந்த பூர்வகுடி மக்கள் பல்வேறு மொழிகளையே பேசினர் எனத் துணிந்து கூறலாம்.

தமிழகத்தில், கி.மு. 800-கி.மு.500 வாக்கில் சேர நாட்டிலும் (இன்றைய கேரளா), தென்பாண்டி நாட்டிலும் இரும்பு பயன்பாடு தோன்றியதைத் தொல்லியல் தடயங்கள் மூலம் அறிய முடிகின்றது. இவ்வுலோகப் பயன்பாடு கி.மு.300 வாக்கில் தமிழகம் முழுவதும் பரவி, மருத நில வாழ்க்கையின் அடிப்படையில் அமைந்த அரசுருவாக்கத்திற்கு அடிகோலியது. இச்சூழல் தமிழகம் முழுவதும் வாழ்ந்து வந்த பூர்வகுடி, பழங்குடி மக்கள் ஒரே மொழியைப் பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். மருத நில நாகரிகம் தோன்றிய சில நூற்றாண்டுகளுக்குள் இலக்கிய மொழியாகப் பரிணமித்துவிட்ட தமிழ், மிகவும் எளிமையான கொடுமொழியாகவே இருந்திருக்க முடியும். மாறாக, சமகாலத்திய செம்மொழிகள் அனைத்தையும்விட ஒரு படி மேலாகவே தமிழ்மொழி செவ்வியல் தன்மையை அடைந்திருந்ததைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. மிக நீண்ட கால மருதநில வாழ்க்கையை மேற்கொண்டு மொழி வளர்ச்சியைப் படிப்படியாகத் தோற்றுவித்திருந்த மக்களின் மொழிகளான சுமேரியன், எல்லாமைட் போன்ற மொழிகள்கூட செவ்வியல் தன்மையை அடைந்திருக்கவில்லை. ஆனால், திடீரென நாகரிக மக்களாக மாறிய தமிழரின் மொழி சிறப்பான செவ்வியல் தன்மையுடன் விளங்கியது மிகப்பெரும் புதிரேயாகும்.

மொழியியலில் மட்டுமல்லாமல், சங்க காலத் தமிழர் தொழில்நுட்பம், வணிகம், போக்குவரத்து, விவசாயம், போர்முறை, அறநெறி போன்ற பல்வேறு துறைகளிலும் சமகாலத்திய வளர்ந்த சமூகங்களுக்கு இணையாக வளர்ந்திருந்ததைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகின்றது.

இப்புதிரை விடுவிக்கும் வகையில் தமிழக வரலாற்றாய்வாளர்களிடையே இருவகையான கருதுகோள்கள் நிலவுகின்றன.

1.2 ஆரிய மாயை (அல்லது) ஐரோப்பிய மாயை

தமிழ் மொழி தோன்றியபொழுதே செம்மொழியான புதிரை விடுவிக்கும் வகையில் 'ஆரியமயமாதல்' என்ற கருதுகோள் முன்வைக்கப்படுகின்றது. தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் வட இந்தியாவிலிருந்து குடியேறிய ஆரியராகிய பிராமணரால் வளர்த்தெடுக்கப்பட்டவை என்பது இக்கருதுகோளின் சாராம்சமாகும். இக்கருதுகோள், பிறப்பிலேயே தமிழ்மொழி செம்மொழியான புதிரை எளிதில் நீக்கிவிடுகின்றது. இக்கோட்பாட்டை எதிர்ப்போர் இதனை 'ஆரிய மாயை' எனவும் கூறுவர்.

கி.மு.600 வாக்கில் வடஇந்தியாவிலிருந்து தமிழகத்திற்குள் குடியேறிய ஆரிய பிராமணர்கள் தமிழ் அரசர்களைக் கத்தியின்றி, இரத்தமின்றித் தங்களின் பண்பாட்டு மேலாண்மையினால் வென்றனர் என்பது இவர்களின் கருத்தாகும். இதற்கு ஆதரவாக புராணங்கள் கூறும் அகத்தியனின் தென்னகக் குடியேற்றம் தொடர்பான கதைகளைப் பயன்படுத்திக் கொண்டனர். வட இந்திய மார்க்ஸிய வரலாற்றறிஞர் டி.டி.கோசாம்பியின் கீழ்க்கண்ட குறிப்புகள் ஆரிய மாயையின் கருத்தோட்டத்தைப் புரிந்து கொள்ள உதவும்.

" வரலாற்றைத் தொழிலாகக் கொண்டவர்களுக்குத் தெற்கிலுள்ள இராஜவம்சப் பட்டியல் இன்பமான பொழுதுபோக்கு. இக்ஷ்வாகு, பல்லவர், பாணர், கடம்பர், சேதியர், கலச்சூரி, சாளுக்கியர், சோழர், பாண்டியர், சேரர் மற்றும் வேறு பல மன்னர்கள் கொண்ட பட்டியல் கவர்ச்சியாக இருந்தாலும் பொதுவாக அர்த்தமற்றது. இடைக்கால இந்திய வரலாற்றைப் பற்றிய புத்தகங்களில் இந்த விவரங்களைப் படித்துக்கொள்ளலாம். ஆனால் இப்புத்தகங்கள், பொதுவாக இம்மன்னர்களால் பரிமாறிக் கொள்ளப்பட்ட ஒருமைப்பாட்டு விஷயங்களைச் சுட்டிக்காட்டத் தவறிவிட்டன. உயர்ந்த பிராமணப் பண்பாடு, பழங்குடி மக்கள் மீது திணிக்கப்பட்டது, அல்லது அவர்களால் சுவீகரித்துக்கொள்ளப்பட்டது. அதே சமயத்தில் பரிமாற்ற உணர்வின் அடிப்படையில், பிராமணர்கள் பூர்வகாலப் பழங்குடி மரபுக் கூறுகளை ஏற்றுக்கொண்டனர்". (டி.டி.கோசாம்பி: பண்டைய இந்தியா - அதன் பண்பாடும் நாகரீகமும் பற்றிய வரலாறு, முதற்பதிப்பு பிப் - 1989; பக் 349.)

சங்ககால வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்க்குடிகளை, கோசாம்பி போன்ற ஆய்வாளர்கள் பழங்குடிகளாக்கி மகிழ்வது தொல்லியல் தடயங்களுக்குப் பெரிதும் முரண்படவில்லைதான். எனினும் தமிழ்வேந்தர் குடியினர் உள்ளிட்ட தென்னக அரசர்களின் வம்சப் பட்டியலைக் கேலிக்குள்ளாக்கிப் பேசுவது ஏற்புடையதாகத் தோன்றவில்லை. தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாட்டுடன் கூடிய மருத நில வாழ்க்கை கி.மு.500லேயே தோன்றியிருந்ததற்கானத் தொல்லியல் தடயங்கள் நூற்றுக்கணக்கான இடங்களில் 75 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருந்த நிலையில், பண்டைய தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய கோசாம்பியின் கருத்து மிகப்பெரிய கேலித்கூத்தாகும்.

"புராதன இந்திய சரித்திர அறிமுகம்" என்ற நூலில் மோரியர் பற்றிய தமிழ் இலக்கியச் சான்றுகள் குறித்த தனது கருத்தைக் கோசாம்பி வெளியிட்டுள்ளார்.

"மோரியர் காலத்தில் தமிழ் இலக்கியம் வளர்ச்சியடைந்திருந்தது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. மோரியர் காலத்தில் தமிழ்நாட்டில் புதிய கற்கால நாகரிகம் நிலவியிருந்தது. எழுத்தும் இலக்கியமும் தோன்றவில்லை. இக்கருத்தை நான் மாற்றிக்கொள்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை." - என மேற்கண்ட நூலில் கோசாம்பி குறிப்பிடுகின்றார்.

மோரியர் காலமாகிய கி.மு.300ல், தமிழ்நாட்டில் புதியகற்கால நாகரிகமே நிலவியது எனக்கூறும் கோசாம்பியின் கீழ்கண்ட குறிப்புகள் அவரது உள்ளக்கிடக்கையை மேலும் தெளிவாக்குகின்றது. "மொழி விவசாயம் ஆகியவற்றின் வளர்ச்சிக்குரிய ஊக்கம் வடக்கிலிருந்து பெரிய அளவுக்கு கி.மு.6ஆம் நூற்றாண்டில் தெற்கே வந்தடைந்தன." (டி.டி.கோசாம்பி: பண்டைய இந்தியா, அதன் பண்பாடும் நாககீகமும் பற்றிய வரலாறு, பக் - 202)

"விந்திய மலைக்குத் தெற்கே ஊடுருவிய ஆரியக் குடியேற்றத்திற்கும், அகத்திய கோத்திரத்திற்கும் சில தொடர்புகள் உண்டு. தெற்கிலுள்ள பெருங்கற்காலத்துடன் அத்தொடர்புகளை உறுதி செய்யலாமென்ற ஆர்வம் எழுந்தாலும் அதன் அடிப்படை இன்றளவும் தெய்வீகக் கற்பனை வடிவிலேயே உள்ளன." (டி,டி.கோசாம்பி: பண்டைய இந்தியா, அதன் பண்பாடும் நாகரீகமும் பற்றிய வரலாறு, பக் - 164)

கி.மு.600ல் வடக்கிலிருந்து தமிழகத்திற்குள் குடியேறிய ஆரியப் பார்ப்பனர், பழங்குடிகளாக வாழ்ந்த தமிழ்ச் சமூகத்திற்கு மொழியையும், விவசாயத்தையும் கற்றுக்கொடுத்தனர் என்பது கோசாம்பியின் கருதுகோளாகும். மோரியர் காலமாகிய கி.மு.300 வரை தமிழகத்தில் புதியகற்கால நாகரிகமே நிலவியது என்றும், இக்கருத்தைத் தான் மாற்றிக் கொள்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கோசாம்பி அடித்துக் கூறுகின்றார். எனவே கி.மு.600லேயே தமிழகத்திற்குள் குடியேறிவிட்டதாக் கருதப்படும் ஆரிய ரிஷி கோத்திரத்தினரும், புதியகற்காலப் பண்பாட்டு மட்டத்திலேயே தமிழகத்திற்குள் குடியேறினர் என்றுதான் கோசாம்பி கருதியிருக்க வேண்டும்.

புதியகற்காலப் பண்பாட்டு மட்டத்தில் வாழ்ந்த கருப்பரிடம் மொழியும் பண்பாடும் வளர்ந்திருக்கவில்லை என்றும், அதே பண்பாட்டு மட்டத்தில் தமிழகத்திற்குள் குடியேறிய ஆரிய கோத்திரத்தினர் வளர்ந்த பிராமணப் பண்பாட்டைக் கொண்டிருந்தனர் என்றும் மனம் போன போக்கில் டி.டி.கோசாம்பி போன்ற சிறந்த வரலாற்றறிஞர் எழுதுவது வியப்பாக உள்ளது. அகத்தியனின் குடியேற்றத்துடன் டி.டி.கோசாம்பியால் சரியாகவே தொடர்புபடுத்தப்படும் பெருங்கற்கல்லறை பண்பாடு நன்கு வளர்ந்த நிலையிலிருந்த இருப்புப் பயன்பாட்டு மருதநில விவசாயப் பண்டபாடாகும். கி.மு.600ல் தமிழகத்திற்குள் குடியேறிய ஆரிய கோத்திரத்தினர் இரும்பு பயன்பாட்டுடன் கூடிய மருத நில விவசாய நாகரிகத்தைத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுடைய வளர்ச்சியடையாத கொடுமொழியைச் செம்மைப்படுத்திச்'செந்தமிழை'த் தோற்றுவித்தனர் என்று கூறினால்கூட ஏற்புடையதாக இருக்கும்.

அவ்வாறு கூறினால், கி.மு.600லேயே செம்மைப்படுத்தப்பட்டுவிட்டத் தமிழ் மொழியில் மோரியர் காலமாகிய கி.மு.300ல் (சங்க காலம்) இலக்கியங்கள் தோன்றியிருக்க வாய்ப்பு உண்டாகி, தமிழக அரசவம்ச பட்டியலுக்கும் அர்த்தமுண்டாகிடும் என்பதால் முன்னுக்குப்பின் முரணாக கோசாம்பியார் குறிப்பிடுகின்றார் போலும். ஆரிய ஆர்வலர்கள் கருதுவது போல், வட இந்தியாவிலிருந்து தர்ப்பைப் புல்லை ஆயுதமாகக் கொண்ட பிராமணர் (அகத்திய கோத்திரத்தினர்) ஒருபோதும் தனிக்கூட்டமாக தென்னகத்தில் குடியேறிவிடவில்லை. தமிழக வேந்தர் வேளிர் குடியுடன் கூடவே பிராமணர்களின் தென்னகக் குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழக அரசகுலத்தவரின் பூர்வீகம், வடஇந்தியா என்பதற்குப் புறநானூற்றுப் பாடல் ஒன்று சான்று பகர்கின்றது.

"நீயே வடபால் முனிவன் தடவினுட் தோன்றி
செம்பு புனைந்தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற் போரண்ணல்" (புறம் : 201)

இப்புறநானூற்றுப் பாடலில், தமிழக வேளிர் குடியினர் சங்ககாலத்திற்கு 49 தலைமுறைக்கு முன் வட இந்தியாவிலுள்ள துவாரகையை ஆண்ட அரசகுலத்தவரின் வழிவந்தவர்கள் என்ற செய்தி பதிவாகியுள்ளது.

கி.மு.600லிருந்து தமிழகம் முழுவதும் கிடைக்கக்கூடிய பெருங்கற்கல்லறைப் பண்பாடு குஜராத் பகுதியிலிருந்து தமிழகத்திற்குள் பரவியிருக்கலாம் என்ற தொல்லியல் அறிஞர்களின் கருத்தும் புறநானூற்றுப் பாடலின் செய்திக்கு உயிரூட்டுவதாக உள்ளது. தொல்லியல் அறிஞர் எஸ்.இராமச்சந்திரன், "சங்க கால உற்பத்திக் கருவிகள்" என்ற கட்டுரையில், தமிழகப் பெருங்கற்கல்லறைகளில் கிடைக்கக்கூடிய தொல்பொருட்கள் பெரும்பாலும், இரும்பினால் தயாரிக்கப்பட்ட போர் ஆயுதங்களாகவே உள்ளன எனக் குறிப்பிடுகின்றார். இச்செய்தியிலிருந்து, தமிழக பெருங்கற்கல்லறைப் பண்பாட்டினை போர்குடிகளான தமிழக அரசர் குடியினரின் குடியேற்றத்துடன் தொடர்புப்படுத்த முடிகின்றதேயன்றி, டி.டி.கோசாம்பி கருதுவதுபோல் அகத்திய (பிராமண) கோத்திரத்தவரின் குடியேற்றத்துடன் தொடர்புபடுத்த முடியவில்லை. அவ்வாறாயின் தமிழகத்தில் வழங்கப்படும் அகத்தியன் தொடர்பான கதைகளுக்குப் பொருள் ஏதும் இல்லை எனக் கூறலாமா? இச்சிக்கலுக்கு நக்கினார்க்கினியரின் உரை ஒன்று தீர்வு நல்கின்றது.

"துவராபதி போந்து நிலங்கடந்த
நெடுமுடியண்ணல் வழிக் கண்ணரசர்
பதினெண்மாயும், பதினெண்குடி
வேளிருள்ளிட் டாரையு மருவா
ளரையுங் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கி". (தொல்: எழுத்ததிகாரம்: பாயிரம்: நச்சினார்க்கினியர் உரை)

இதன் பொருளாவது, சிவபெருமானின் விருப்பத்திற்கிணங்க தென்திசை நோக்கிப் பயணித்த அகத்தியன், வழியில் துவாரகை சென்று, மாவலியிடமிருந்து பூமியை அபகரிக்க, நிலம் அளந்த நெடுமுடியண்ணலாகிய திருமாலின் வழி வந்த வேந்தர் குடியினரையும், பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும், அருவாளரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, தமிழகம் குடியேறிப் பின் அவர்களின் உதவியுடன் காடு கெடுத்து நாடாக்கினான் என்பதாகும். அதாவது அகத்திய முனிவரின் தலைமையிலேயே தமிழக அரசகுலத்தவர் வட இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்துள்ளதாக நச்சினார்க்கினியர் உரைக்கின்றார். வடக்கிலிருந்து குடியேறிய பிராமண கோத்திரத்தினர் கத்தியின்றி, இரத்தமின்றி தங்கள் பண்பாட்டு மேலாண்மையினாலேயே தமிழகப் பூர்வகுடி மக்களை வென்றெடுத்தனர் என்ற ஆரிய ஆர்வலர்களின் கருதுகோள், பேனைப் பெருமாளாக்கிக் காட்டும் வித்தையே ஆகும். சிறந்த போர்க் குடிகளான தமிழக வேந்தர் குடியினர் தங்களுடன் குடிபெயர்ந்த வேளிர் மற்றும் அருவாளர் ஆகிய போர்க் குடிகளின் துணை கொண்டு, தமிழகத்தில் ஏற்கனவே வாழ்ந்து வந்த பழங்குடி மக்களைத் தங்களின் வாளின் வலிமையால் வணக்கியதையே சங்க இலக்கியக் குறிப்புகளும், தொல்லியல் தடயங்களும் நிறுவுவதாக உள்ளன. இப்போர்க் குடிகளுக்குக் குரு நிலையில் தலைமையேற்று வழி நடத்தியவர் அகத்திய கோத்திரத்தினர் ஆவர். எனவே, தமிழக அரசர் குடியினரையும் பிராமண கோத்திரத்தினரையும் தனித்தனிக் கூட்டங்களாகப் பிரித்துப் பார்ப்பதற்குத் தமிழகச் சூழலில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதை உணரவேண்டும்.

எனவே, பிராமணமயமாதல் அல்லது ஆரியமயமாதல் என்ற ஆரிய ஆர்வலர்களின் கருகோள் அவர்களது சொந்த விருப்பத்திற்கேற்ப, பல ஆதாரங்களைத் திரித்துக் கூறியும், திரிக்கமுடியாத ஆதாரங்களை மறைத்தும் கட்டப்பட்ட ஒரு மாயையாகும். மனித இனங்களில் ஐரோப்பிய இனங்களே உயர்ந்தவை, ஐரோப்பிய இனங்களில் ஆரிய இனமே உயர்ந்தது. ஆரியரில் பிராமணரே உயர்ந்தவர் என்ற கருத்துதான் ஆரிய மாயையின் சாராம்சமாகும்.

டி.டி. கோசாம்பி கருதுவது போல், மொழி வளர்ச்சியில் சிறிதும் முன்னேற்றம் பெற்றிராதப் புதியகற்காலப் பண்பாட்டுக் குடிகள் வாழ்ந்த தமிழகத்தில், ஆரியமயமாதல் நடைபெற்றிருக்குமேயானால் தமிழ் மொழி, அரசியல் மற்றும் சமூகவியல் தொடர்பான பல சொற்களைச் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய சொற்கள் தமிழுக்கே உரியனவாக நாடு, கூற்றம், ஊர், சீறூர், பாடி, பட்டணம், பாக்கம், குறும்பு, வேந்தன், நாடன், ஊரன், மகிழ்னன், வேளிர், வெற்பன், சிலம்பன், சேர்ப்பன், புலம்பன், கிழவன், சான்றோன், ஏனாதி, எட்டி, சீறூர் மன்னன், பெருமகன், பெருங்குடி, சிறுகுடி, நாள்மகிழ் இருக்கை, சான்றோர் அவையம், ஐம்பெருங்குழு, என்பேராயம், நெடுமுடி, குறுமுடி, செங்கோல், அரசுகட்டில், அரியணை, வெண்கொற்றக்குடை, கொடி, முத்திரை, முரசு, கடிமரம், தேர், கஞ்சுகமாக்கள், தூதர், ஒற்றர், திருமுகக்கணக்கு, உழைச்சுற்றாளர், அகவர், படைச்சிறுக்கன், கட்டியங்காரன், உழையர், பெருங்கணி என்று ஒரு பெரும் பட்டியலையே கொடுக்கலாம். சமயத் துறையிலும் தேவையான அளவிற்குத் தனித்தமிழ்ச் சொற்கள் நிறைந்து காணப்படுகின்றன. தமிழ் மொழி சமஸ்கிருதச் சொற்கள் சிலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளதைப் போல், சமஸ்கிருதமும் தமிழ்ச் சொற்கள் சிலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளதைக் காண முடிகின்றது. எனவே, சில சொல் பரிமாற்றகளைக் கொண்டு சமஸ்கிருதம் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்தியது என்றோ அல்லது தமிழ்மொழி சமஸ்கிருதம் மீத ஆதிக்கம் செலுத்தியது என்றோ கூறுவது அறிவுக்கு ஒவ்வாத ஒன்று.

ஆரிய மாயை, பண்டைய உலக வரலாற்றைத் தங்கள் விருப்பத்திற்கேற்பத் திரித்துச் சித்திரித்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய மாயையின் இந்திய வடிவமாகும். ஐரோப்பிய மாயையினரால் தோற்றுவிக்கப்பட்டக் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய சித்திரத்தைக் கொண்டு ஐரோப்பியரே உலகின் முதல் ஆணாதிக்க சமூகத்தினராகப் பரிணமித்தவர் எனப் பரவலாக நம்பப்பட்டு வருகிறது. இந்திய சமூகத்தில் இந்தோ ஆரியரே முதல் ஆண்வழிச் சமூகத்தவர் என ஆரிய ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். கி.மு. 4000 ஆண்டளவில் ஆரிய இன மக்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும் காகேசியப் பரப்பில், நால்சிக் என்ற இடத்திலுள்ள புதிய கற்காலக் கல்லறைகளில் ஆண்களை வலது புறமும் பெண்களை இடது புறமுமாகச் சாய்த்துப் புதைத்திருந்ததை இதற்குச் சான்றாகக் காட்டுகின்றனர். இது ஏற்கக்கூடியதுதான். ஆனால் சமகாலத்தில் மேற்காசியாவில் வாழ்ந்துவந்த கருப்பின மக்கள் வேட்டை நிலையில் தோன்றியிருந்த ஆண்வழிச் சமூக அமைப்பைக் கடந்து உலோகப் பயன்பாட்டையும், நீர்ப்பாசனத்துடன் கூடிய விவசாயத்தினையும் அறிந்து மிக வளர்ந்த பண்பாட்டு நிலையில் வாழ்ந்து வந்துள்ளனர். இது மட்டுமின்றி மேற்காசியாவிலிருந்து பரவிய பண்பாட்டின் மூலமே ஆரியர் உட்பட்ட ஐரோப்பியரிடம் புதிய கற்காலப் பண்பாடு தோன்றியது என்பதைத் தொல்லியல் தடயங்கள் தெளிவாக நிறுவுகின்றன.

மேற்காசியக் கருப்பின மக்கள் புதிய கற்கால நாகரிகத்தை ஐரோப்பாவிற்கு எடுத்துச் செல்லும் வரையிலும், ஆரியர் தாய் தலைமையிலான இரத்த உறவுக் குடும்ப அமைப்புக் கூட்டங்களாகவே வாழ்ந்துள்ளனர் எனத் தெரிகிறது. இதற்குக் கிரேக்கப் புராணங்கள் சான்றாக உள்ளன. கிரேக்க புராணங்கள்படி முதலில் சூனியத்திலிருந்து கேயா என்ற பூமித் தாயும் டார்டாரஸ் (Tartarus) என்ற பாதாள உலகக் கடவுளும் ஈராஸ் (Eros) என்ற காதல் தெய்வமும் தோன்றினர். பூமித்தாய் கேயா ஆண் துணையின்றி கன்னித் தாயாகி யுரேனஸ் (Uranus) என்ற ஆகாயக் கடவுளையும் அவுரியா என்ற மலை தெய்வத்தையும் பாண்டஸ் (Pontus) என்ற கடல் தெய்வதத்தையும் தோற்றுவித்தாள். பின் யுரேனஸைக் கணவனாக்கிக் கொண்ட கேயா, மூன்று ஒற்றைக் கண் அரக்கர்களையும் மூன்று 50 தலைகள் கொண்ட அரக்கர்களையும் பெற்றெடுத்தாள். பிள்ளைகளால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் எனக் கருதிய யுரேனஸ் அவர்களைப் பாதாள உலகிற்குள் தள்ளிவிடுகிறான். இச்செயல் கேயாவை வெறுப்படையச் செய்தது. இந்நிலையில் இவ்விருவருக்கும் டைட்டன் (Titan) என அழைக்கப்பட்ட அசுரர்கள் பிறந்தனர்.

கடைசி டைட்டனாகிய குரோனஸ் (Cronus) தனது தாயின் விருப்பப்படித் தந்தை யுரேனஸைக் கொன்றுக் கடவுளர்களின் தலைவனாகிறான். பின் குரோனஸ் தன் சகோதரி ரியா (Rhea)- வை மனைவியாக்கிக் கொள்கிறான். அதன் பின் குரோனசின் மகன் ஜீயஸ் (Zeus) தந்தையை வென்று மேலுலகத்தின் கடவுளாகிறான். ஜீயஸ் தனது சகோதரி ஹீரா (Hera)- வை மணந்து வேறோர் கடவுளின் மனைவியாகிவிட்ட மற்றோர் சகோதரி டெமடரைக் (Demeter) காதலிக்கிறான் என்பதாகச் சொல்கிறது கிரேக்கப் புராணம்.

கிரேக்கப் புராணப்படி கேயா தனது மகன் யுரேனஸைக் கணவனாக்கிக் கொள்கிறாள். மேலும் சகோதர, சகோதரிகளுக்குள் மணவுறவிருப்பது மிக இயல்பாகக் காட்டப்பட்டுள்ளது. தந்தை சொந்த மகன்களைப் போட்டியாளனாகக் கருதி பாதாள உலகிற்கு அனுப்பிவிடுவதும் பிள்ளைகள் தந்தையைக் கொன்று பதவியைக் கைப்பற்றுவதும் கூறப்படுகின்றன. பிள்ளைகளைப் போட்டியாளராகக் கருதுகிற கடவுளர்களையோ அல்லது தந்தையைக் கொன்றுப் பதவியை எடுத்துக் கொண்ட மகன்களையோ இந்துப் புராணங்களில் காணமுடியாது.

மேலும், சகோதர-சகோதரி மண உறவு இந்துப் புராணங்களுக்கு முற்றிலும் அன்னியமானது. மாறாக இந்துப் புராணங்கள் காட்டும் மணஉறவுகள் மாற்று சகோதர மண உறவை (Cross Cousin Marriage) அடிப்படையாகக் கொண்டுள்ளன. மாற்றுs சகோதர மண உறவு வட இந்திய ஆரிய சமூகத்திற்கும்கூட அன்னியமானதாகும். கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போதாயன தர்ம சூத்திரம் மாற்று சகோதர மண உறவு தென்னிந்தியருக்கே உரியது எனக் கூறுகிறது. இந்துப் புராண மரபுகள் திராவிடருக்கே, குறிப்பாகத் தமிழருக்கே பொருந்தி வருவதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆங்கில மொழி உறவுப் பெயர்களான பிரதர் - இன் - லா, சிஸ்டர் - இன் - லா, சன்- இன் - லா, டாட்டர் - இன் - லா போன்றவை இரத்த உறவுக் குடும்ப அமைப்பின் சாயலைக் கொண்டுள்ளன. ஐரோப்பியர், காட்டுமிராண்டி நிலையிலிருந்து மிகவும் பிற்காலத்திலேயே நாகரிகத்திற்குள் நுழைந்ததால்தான் இத்தகையப் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் நீடித்திருக்கின்றன. வேறு சில பண்பாட்டு எச்சங்களும்கூட இதற்கு வலு சேர்க்கின்றன.

பெண்களின் கற்புநெறி என்பது ஆண்களின் தனிவுடைமையைப் பாதுகாக்கக் கூடிய நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் மிக முக்கியக் கூறாகும். கி.மு. 1750-இல் பாபிலோனிய அரசன் ஹமுராபி வகுத்த சட்டங்கள் முதல் மனு ஸ்மிருதி வரையிலும் உலகின் நிலப்பிரபுத்துவ சமூகச் சட்டங்கள் அனைத்தும் பெண்களின் கற்பு நெறிக்கு மிக முக்கியமான இடத்தைக் கொடுத்துள்ளன. ஐரோப்பிய சமூகம், பெண்கள் கற்பு நெறியைப் பேணுவதற்காகக் கொடுமையான சட்டங்களைப் பழங்காலத்திலிருந்தே பெற்றிருந்த போதிலும்கூட கற்பு நெறியைக் கடைப்பிடித்துக் காக்க முடியாமல் தடுமாறுவதை நாம் காண்கிறோம். அங்கு நட்புள்ள எந்த ஒரு ஆணும், பெண்ணும் பொது இடத்தில் கட்டிப்பிடிப்பதும் முத்தமிடுவதும் இயல்பானதாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. விவாகரத்தும், மறுமணமும் வெகு இயல்பானதாக அங்கு உள்ளன. விழாக்களில் ஆணும், பெண்ணும் சேர்ந்து ஆடுவதும் பாடுவதும் வரைமுறையற்ற நிலையில் மேட்டுக்குடியினரிடமும் நடைபெறுகிறது. இவ்வாறு இருபாலரும் சேர்ந்து ஆடுவதைத் தமிழகக் கிராமப்புறங்களில்கூட நாம் காணமுடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சங்க கால உண்டாட்டுகளில்கூட இருபாலரும் சேர்ந்து வரைமுறையின்றி கூத்தாடும் வழக்கம் இருந்ததில்லை. ஐரோப்பியரின் இன்றைய நடனக்கலை பழங்குடி நிலை இனக்குழு நடனங்களின் ஒரு வளர்ந்த வடிவமாகவே தெரிகின்றது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப அமைப்பின் வளர்ந்த வடிவத்தைத் தமிழ்ச் சமூகம் சங்க காலத்திலிருந்து கொண்டுள்ளது. கற்புநெறி, தமிழ்ச் சமூகத்தின் மனதளவிலேயே பதிவாகியுள்ள அளவு வேறெந்த சமூகத்திலும் இல்லை. கி.மு. 1500லேயே பாபிலோனியா, அக்காடியன், அசிரியா, ஹிட்டைட், காசைட், மிட்டானி போன்ற நிலப்பிரபுத்துவ அரசுகளை மேற்காசியாவில் கருப்பின மக்களிடமிருந்து கைப்பற்றித் தமதாக்கிக் கொண்ட போதும்கூட ஐரோப்பியரிடம் தமிழர் அளவுக்கு கற்புநெறி மனதிலே பதிந்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கி.மு. 1500க்கும் முன்பே, மிக நீண்ட காலமாகத் தந்தை வழிச் சமூகமாகவும் அதனடிப்படையில் தோன்றிய தனிவுடைமைச் சமூகமாகவும் வாழ்ந்திருந்ததாலேயே பெண்களின் கற்புநெறி இவ்வளவு ஆழமாகத் தமிழ்ச் சமூகத்தில் வேரூன்றியுள்ளது எனக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

சங்க காலத் தமிழ் வேந்தர் குடியினரில் பாண்டியரும், சோழரும் இரண்டாயிரம் ஆண்டுகளாகச் சிறு பகுதியையேனும் ஆட்சி செய்து வந்ததற்குச் சான்றுகள் உள்ளன. சேரரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளனர். இந்நீண்ட கால வரலாற்றில் ஒரேயொரு பெண் அரசிகூட வேந்தர்கள் சார்பில் அரசுக் கட்டிலில் அமரவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் சமூகம், ஆண்வழிச் சமூக அமைப்பில் நீண்ட காலம் வாழ்ந்ததால் மட்டுமே இது சாத்தியமாயிற்று எனலாம்.

ஆரிய (ஐரோப்பிய) மாயையினர், அம்மாயையிலிருந்து விடுபட்டு விவாதிக்கப்படும் விஷயங்களைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே இவ்வளவு நீண்ட விளக்கம் மேலே தரப்பட்டுள்ளது. மேற்கண்ட பொருள் குறித்துப் பண்பாட்டு மானுடவியலாளர் பரிசீலனை செய்வாராயின் அது பயனுடையதாக அமையும்.

ஆரிய மாயைக்கு எதிராக வளர்த்தெடுக்கப்பட்ட மற்றுமொரு மாயை, தமிழ்ச் சமூக வரலாற்றை ஆட்டிப்படைத்து வருகின்றது. ஆரிய மாயையைவிட மிக மோசமான அளவில் தமிழ்க் குடிகளின் வரலாற்றைக் குழி தோண்டிப் புதைத்து வரும் இம்மாயையை அடுத்துக் காண்போம்.

கப்பலின் கதை

மலேசியாவில் உள்ள பலருக்கு மிகவும் பரிச்சயமான பெயர்கள்
சில உண்டு. அந்தப் பெயர்களில் சில கப்பல்களின் பெயர்களும்
அடங்கும்.
அவற்றில் மிகவும் புகழ் வாய்ந்த பெயர் - 'ரஜூலா'.
தமிழர்களால் மிகச் செல்லமாக 'ரசூலாக் கப்ப' என்று அழைக்கப்
பட்ட கப்பல்.
கடாரம், ஸ்ரீவிஜயம், இலங்காசோகம் போன்ற நாடுகள் மலாயாவில்
இருந்த காலத்திலேயே பாய்மரக் கப்பல்களில் தமிழர்கள் வரப்போக
இருந்திருக்கின்றனர்.

அவர்களுடைய கப்பல்கள் மிகவும் பெரியவை; சிறப்புமிக்கவை.
எண்ணிக்கையிலும் அதிகம் இருந்திருக்கின்றன. கம்போடியா, ஜாவா
ஆகிய இடங்களில் உள்ள புடைப்புச்சிற்பங்களில் இந்தக் கப்பல்களைக்
காணலாம். அவற்றின் படங்களைக் காணவேண்டின் அகத்திய
ஆவணத்தைக் கிளறிப் பார்க்கலாம்.

ஆகையால்தான் மலாய் மொழி, இந்தோனேசிய மொழி ஆகியவற்றில்
கப்பலை 'கெப்பால்' என்று குறிப்பிடுகிறார்கள். எப்போதுமே ஒரு தமிழ்ச்
சொல்லோ சம்ஸ்கிருதச்சொல்லோ மலாய் மொழிக்குள் செல்லும்போது
இரண்டாவது அட்சரம் நெடிலாக மாறும். மலர்- மெலோர்;
படகு - பெராஹ¤; முதல் - மோடால்; கடை - கெடாய்; சகல - செகால....
இப்படி......இப்படி.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இரும்பால் ஆன
நீராவிக்கப்பல்கள் வழக்கத்திற்கு வந்தன. அப்போதுதான்
'சஞ்சிக்கூலிகள்' என்ற பெயரில் லட்சக்கணக்கான தமிழர்கள்
மலாயாவுக்கும் சுமாத்ராவுக்கும் கொண்டுவரப்பட்டனர்.

ஆங்கிலேயெர்களின் ஆதரவில் லேவாதேவித் தொழில்
செய்வதற்காக செட்டிநாட்டிலிருந்து நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்
வந்தனர். அவர்களுடன் வேளாளர், யாதவர், கள்ளர், வல்லம்பர் போன்ற
குடியினரும் வந்தனர். தமிழகத்தின் கரையோரப் பட்டினங்களிலிருந்து
தமிழ் முஸ்லிம்கள் வந்தனர். இவர்கள் வர்த்தகங்களைச் செய்துவந்தனர்.
யாழ்ப்பாணம், கேரளம், ஆந்திரம் ஆகிய இடங்களிலிருந்தும் குறைவான
எண்ணிக்கைகளில் வந்தனர். சீக்கியர்கள் போலீஸ், பட்டாளம், காவல்,
பால்வியாபாரம் போன்ற துறைகளில் ஈடுபட்டார்கள்.

தமிழர்களில் பெரும்பான்மையினர் கூலிவேலைகளில் ஈடுபடுத்தப்
பட்டனர்.
இந்தப் போக்குவரத்துக்காக சில கப்பல்கள் விடப்பட்டன.
அவற்றில் பல கப்பல்கள் பெயர் தெரியாமலேயே போய்விட்டன.
மனதில் நிற்கக்கூடியவை ரோணா, அரோண்டா, ரஜூலா,
ஜலகோபால், ஜல உஷா, ஸ்டேட் ஆ·ப் மெட்ராஸ், எம்.வி.சிதம்பரம்
ஆகியவை.
இவற்றில் ரோணாவும் அரோண்டாவும் மூழ்கிவிட்டன.
முதலில் ரோணாவும் ரஜூலாவும் இணைந்து ஓடின.
பின்னர் ரஜூலாவும் ஜலகோபாலும் போட்டி போட்டுக்கொண்டு ஓடின.
வெவ்வேறு கம்பெனிகள்.
பின்னர் ஜலகோபாலுக்குப் பதில் ஸ்டேட் ஆ·ப் மெட்ராஸ் கப்பல்
ஓடியது.
ஏற்கனவே கப்பல் பிரயாணத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
இப்போது எங்களில் பலரின் வாழ்வில் ஒரு முக்கிய பங்கை வகித்த
கப்பலைப் பற்றி சொல்லப்போகிறேன்.

எஸ்.எஸ். ரஜூலா.

'எஸ்.எஸ்.ரஜூலா' எனப்படும் அந்தக்கப்பல் 1923-ஆம் ஆண்டில்
பார்க்லேய் கம்பெனி என்னும் கம்பெனியால் கட்டப்பட்டது. அப்போதே
அது இரண்டரை லட்சம் சவரன்கள் விலைக்கு வாங்கப்பட்டதாகப்
பெருமையாகச்சொல்வார்கள். அதனுடன் ரோணா என்னும் கப்பலும்
கட்டப்பட்டது. இரண்டும் அரை மில்லியன் சவரன்கள் பெறுமானம்.
இரண்டுமே 1927-ஆம் ஆண்டில் சென்னைக்கும் பினாங்குக்கும்
இடையே விடப்பட்டதாகச் சொல்வார்கள். என்னுடைய தந்தையார்
அந்தக் கப்பலில்தான் பினாங்கு மார்க்கமாக இந்தோனேசியாவிலுள்ள
மீடானுக்குச் சென்றிருக்கிறார். 1927-ஆம் ஆண்டிலிருந்து அவருடைய
டயரி மீடானில் தொடங்குகிறது.
ரஜூலாக் கப்பல் புதுக் கருக்கு அழியாமல் இருந்தபோது அதில்
பிரயாணம் செய்திருக்கிறார்.
1900-இலிருந்து இரும்புக்கப்பல்கள் ஓடிக்கொண்டுதான் இருந்தன.
ஆனால் அவை வகமாகவும் செல்லவில்லை. சிறியதாகவும் இருந்தன.

ரஜூலாவும் ரோணாவும் ஒரே சமயத்தில் கட்டப்பட்டு இரண்டும்
ஒன்றாகவே வந்து சேர்ந்தன.
அப்போது இந்தியா பிரிட்டிஷ் வசமிருந்தது. கல்கத்தாவே
இந்தியாவின் தலைநகரம். பர்மாவும் இந்தியாவுடன்தான் இருந்தது.
'ஸ்ட்ரேய்ட்ஸ் ஸெட்ல்மெண்ட்ஸ்' என்ற பெயரில் மலாயாவில் பினாங்கு,
மலாக்கா, சிங்கப்பூர் ஆகியவற்றை பிரிட்டிஷ் தம் ஆட்சியில் வைத்திருந்தது.
பின்னர் நான்கு சுல்த்தானிய மாநிலங்களைத் தன் ஆட்சியில் கொணர்ந்தது.
பின்னர் இன்னொன்றும் சேர்ந்தது. 1910-இல் மேலும் நான்கு சுல்த்தானிய
மாநிலங்கள் தாய்லந்திலிருந்து பிரிக்கப்பட்டு இணைத்துக்கொள்ளப்பட்டன.
அப்படி உருவாகியதுதான் பிரிட்டிஷ் மலாயா எனப்படுவது.
இதுபோக போர்னியோத் தீவிலுள்ள சராவாக், வடபோர்னியோ
ஆகியவையும் பிரிட்டிஷ் வசமே இருந்தன. அதற்கும் அப்பால் ஹாங்க்காங்,
ஷாங்ஹாய் ஆகியவை இருந்தன. ஹாங்காங் என்பதும் சிங்கப்பூரும்
'க்ரௌன் காலனி' என்னும் சிறப்பு அந்தஸ்த்தைப் பெற்றவை. சுலபமாகக்
கழட்டிக்கொண்டு வந்துவிடமுடியாது. அதற்கெல்லாம் ரொம்பக் குள்ளநரித்
தந்திரம் வேண்டும். ஏமாற்றவேண்டும். இரண்டகம் செய்யவேண்டும்.
இல்லையெனில் பயமுறுத்தவேண்டும்.

அந்தக் காலத்தில் 'இம்ப்பீரியல் மெயில் ஸர்வீஸ்' என்ற அரசுத் துறை
இருந்தது. உலகம் முழுவதும் செயல்பட்டு வந்தது. லண்டனிலிருந்து
பொருள்கள், கடிதங்கள், அறிக்கைகள், உத்தரவுகள் எல்லாம் கப்பல்
வழியாக வரும்.
இந்த இம்ப்பீரியல் மெயில் ஸர்வீஸில் முக்கிய அங்கமாக
விளங்கியது லண்டன் - பம்பாய், பம்பாய்-சென்னை, சென்னை-சிங்கப்பூர்,
சிங்கப்பூர்-ஹாங்காங் இணைப்பு.
பம்பாயிலிருந்து இந்தியா முழுமைக்கும் ஒரு பெரிய நெட்வர்க்
இருந்தது. அது வேறு.
கப்பல்கள் லண்டனிலிருந்து புறப்பட்டு, ஸ்பேய்னைச் சுற்றிக்
கொண்டு, ஜிப்ரால்ட்டரைத் தாண்டி, மத்தியதரைக் கடலுக்குள் பிரவேசித்து,
மால்ட்டா வந்து, அங்கிருந்து சூயெஸ் கால்வாய் வழியாக செங்கடலுக்கு
வந்து, ஏடன் துறைமுகத்தில் தங்கி, அங்கிருந்து கிஜுகிஜுவென்று
பம்பாய்க்கு வந்து சேரும்.
ஒரு மாதத்துக்கு இரண்டு முறைகள் இவ்வாறு கப்பல்கள்
லண்டனிலிருந்து வரும்.
கடிதங்கள் வகையறாக்களை ஒரு விசேஷ எக்ஸ்ப்ரெஸ் ரயில்
மூலமாகச் சென்னைக்கு அனுப்புவார்கள்.
அந்த எக்ஸ்ப்ரெஸ் ரயிலை அனுசரித்து ரஜூலா அல்லது ரோணா
சென்னையிலிருந்து புறப்படும். ஆகவே மாதத்துக்கு இரண்டு முறை
சென்னையிலிருந்து பினாங்கு/சிங்கப்பூருக்குக் கப்பல்கள் செல்லும்.

Wednesday, November 3, 2010

பழைய எலும்புக்கூடு

5 லட்சம் ஆண்டு பழைய எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

மாட்ரிட்: மனித வர்க்கத்தில் உலகில் மிகவும் முதன்மையானவர் என்று கருதப்படும் மாற்றுத் திறன் ஆணின் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஸ்பெயினின் மாட்ரிட் பல்கலைக்கழகம்,

கார்லஸ்&3 ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் இதை கண்டுபிடித்துள்ளனர்.



ஸ்பெயினில் சிமா டி லாஸ் ஹ்யூசாஸ் என்ற இடத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. எலும்புகளின் தன்மை பரிசோதிக்கப்பட்டதில் அந்த எலும்புகள் சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.



எல்விஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படிமம் இருந்த இடத்தில் மேலும் பல எலும்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். கிடைத்திருக்கும் எலும்புக்கூட்டுக்கு சொந்தக்காரர் மாற்றுத் திறனாளி, நடுத்தர வயதுக்காரர் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Wednesday, October 27, 2010

இலக்கியம்

இலக்கிய வளர்ச்சி


காலங்கள் தோறும் அமைந்த பின்புலங்களால் உருவாகிய படைப்புகள், ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு வகையான போக்கில் வளர்ந்தன.


தொடக்கக் காலத்தில், உண்ட மகிழ்ச்சி அல்லது இன்னோரன்ன மகிழ்ச்சியில் கூட்டமாக இருந்து ஓசை எழுப்பிப் பாடுவது ஒரு மரபாக இருந்தது. அவ்வாறு வாய்மொழிப் பாடல்கள் வளர்ந்தன. பின்னர்ப் பொழுதுபோக்குக் கூறாகக் கதை சொல்லுதலும், சுற்றியிருந்து அதைக் கேட்டலும் மரபாகியது. பிற்காலத்தில் காப்பியங்கள் பல தோன்றுவதற்கு அவை அடிப்படையிட்டன. உலகப் புகழ்பெற்ற ஹோமரின் (Homer) காப்பியங்கள் இலியட், ஒதீசி ஆகியவை இத்தகைய கதைகளின் வளர்ச்சி நிலை என்பர். இராமாயணக் காப்பியமும் இத்தகைய வளர்ச்சி நிலையில் தோன்றியதுதான்.


உலகக் காப்பியங்கள் பலவும் வாய்மொழிக் கதைகளின் வளர்ச்சி நிலை என்பது மில்மன் பரி (Milmen Parry) போன்ற அறிஞர்களின் கருத்து. இத்தகைய காப்பியத்தை வளர்ச்சிக் காப்பியம் (Epic of Growth) என்று குறிப்பிடுவர்.

வாய்மொழி இலக்கியம்


வாய்மொழி இலக்கியங்கள், மனனம் பண்ணுதலிலும், நினைவாற்றலிலும் சிறப்புற்றோரின் மனத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வாழ்ந்து வந்தன. செவிவழிச் செய்திகளாக இத்தகையோர் இடையே பரிமாறப்பட்டு வளர்ந்தன. வழிவழியாக வந்த கர்ண பரம்பரைக் கதைகள் என மக்களிடம் செல்வாக்குப் பெற்று வாழ்ந்தும் - வளர்ந்தும் வந்தன. இவற்றில் அவ்வப்போது செய்திகளைக் கூட்டலும் கழித்தலும் உண்டு. சுய கற்பனைக்கும் வாய்ப்புண்டு. மக்கள் ஊர் விட்டு ஊர் இடம் பெயர்ந்து செல்லும்போது வாய்மொழி இலக்கியங்களும் இடம் பெயர்ந்து சென்றன; செல்வாக்குப் பெற்றன. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும், ஓலைச் சுவடிகளிலும் பதிவு பெறும் வரையிலும் செவிவழிச் செய்திகளாகவே வாய்மொழி இலக்கியங்கள் வாழ்ந்தன. அதன் பின்னர், நவீன அறிவியல் கண்டு பிடிப்பான அச்சு இயந்திர அறிமுகத்தால் ஏற்பட்ட அச்சிடுதல் வந்த பின்னரும் (எழுத்து வடிவிற்கு வந்த பின்னரும்) வாய்மொழி இலக்கியம் நாட்டுப்புறவியலாக வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.


மகிழ்வூட்டலும் துதிபாடலும்


நிலவுடைமைச் சமுதாயத்தில் (Federal Society), முன்னர்க் குறிப்பிட்டதைப் போல, மகிழ்வூட்டலும், துதிபாடலும் பாடுபொருளாக இருந்தன. தனிநபர் வழிபாடு மிகுந்த இலக்கியங்கள் எழுந்தன. இந்தப் போக்கு முடியாட்சி மன்னர்கள் காலம் வரையிலும் தொடர்ந்தது. புறநானூற்றுப் பாடல்கள் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாய்த் திகழ்கின்றன. இத்தகைய இலக்கியங்கள் மன்னனின் ஒளி(புகழ்), ஆற்றல், ஈகை, அளி(கருணை) ஆகியவற்றைக் கொண்டாடிப் போற்றின. இதற்காக உருவானதே பாடாண் திணை என்னும் புறத்திணை. 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்பதை இலக்கியத்தின் அடிப்படையாகக் கொண்டிருந்தனர்.


காப்பியங்களின் தன்மை


முற்காலத்தில் எழுந்த காப்பியங்களில் வீரமும் இயல்பு மீறிய தன்மைகளும் போற்றப்பட்டன. பின்னர்க் கூர் அறிவு இவ்வாறு போற்றப்பட்டது. இந்த மாற்றத்தை ஒதீசி போன்ற கிரேக்கக் காப்பியங்களில் பார்க்க முடிகிறது. அதன்பின்னர்க் கூர் அறிவு தீய பாத்திரங்களின் இயல்பாகப் படைக்கப்பட்டது. நம்பமுடியாதவற்றையும், இயற்கை இகந்த நிகழ்ச்சிகளையும் (Supernatural Element) மையமாகக் கொண்டு படைக்கப்பட்டு வந்த காப்பியப் போக்கில் படிப்படியாகப் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. நமக்கோ, நம்மில் ஒருவருக்கோ நடந்தது போன்ற ஓர் உணர்வை ஊட்டுகின்ற நம்பக்கூடிய நடப்பியல் தன்மை (Realism) வாய்ந்த இலக்கியங்களை - காப்பியங்களைப் படைக்கும் போக்கு ஏற்பட்டது. அதற்குச் சிறந்த தமிழ் எடுத்துக்காட்டு சிலப்பதிகாரம். சாதாரண வாழ்வின் இயல்புகள், நடைமுறைகள் பலவற்றை இலக்கியமாக்கியிருப்பதைச் சிலம்பில் காணலாம்.


கவிதையின் செல்வாக்கு


வாய்மொழி இலக்கியத்தைக் கேட்டுச் சுவைத்து வந்த மக்கள், கவிதையையும், கவிதையில் கையாளப்பட்ட சொல்வன்மையையுமே மிகவும் உயர்வாக மதித்தனர். இன்றைக்குள்ள, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, பல்லூடக வாய்ப்புகள் இல்லாத கால கட்டத்தில், கவிதை பாடிய புலவர்களே, மக்கள் தேவைகளை நிறைவு செய்பவர்களாகத் திகழ்ந்தனர். எனவே, புலவர்கள் மக்களிடையே மிகவும் செல்வாக்குடையவர்களாக இருந்தனர்.


தொன்மைக் காலத்தில், மனிதனின் அறிவு வெளிப்பாடுகள் முழுவதும், செய்யுள் வடிவிலேயே இருந்தன. மந்திரம், மாயம், வானநூல், வரலாறு, புராணம், இயற்கையறிவு, அறிவியல் முதலிய யாவும் செய்யுள் வடிவிலேயே தோன்றின. பன்னெடுங்காலமாகச் செய்யுள் வடிவிலேயே வழங்கி வந்தன. இவைகள் அனைத்தும் இலக்கியங்கள் அல்ல எனினும் இலக்கியத்திற்குரிய வடிவில் இருந்தன. ஆகவே அந்த வடிவத்திற்குச் செல்வாக்குத் தொடர்ந்து இருந்து வந்தது. இப்போக்கு அச்சுக்கலை அறிமுகமாகி உரைநடை வளர்ச்சியடைவது வரையிலும் தொடர்ந்தது.


உரைநடையின் செல்வாக்கு


ஐரோப்பியர் வருகை தமிழ் இலக்கியத்தில் பல மாறுதல்களை நிகழ்த்தியது. குறிப்பாக உரைநடை வளர்ச்சியில் பெரும் பங்களிப்பைச் செய்தது.


வணிகத்தில் தொடங்கி, சமயம் பரப்ப முற்பட்டு, சமுதாயச் சீர்திருத்தத்தில் பங்கு கொண்டு, இலக்கியப் பணியும் செய்தவர்கள் ஐரோப்பியர்கள். அவர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட அச்சு இயந்திரம், அதன் வாயிலாக ஏற்பட்ட மாறுதல்கள் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தின. பாதுகாப்பின்றி, அழிந்தும், மறைந்தும் கொண்டிருந்த ஓலைச் சுவடியிலிருந்த இலக்கியங்களுக்குப் பாதுகாப்பும் புத்துயிரும் அளித்தது அச்சுக்கலை. அச்சடிக்கப்பட்ட நூல்கள், மேலும் பல நூல்கள் உருவாக உறுதுணையாக அமைந்தன. புதிய இலக்கிய வடிவங்கள் தோன்றுவதற்குரிய சூழலை அச்சுக்கலை ஏற்படுத்தியது. நினைவாற்றலிலே வாழ்ந்து, கற்றறிந்தோர் மனத்தில் பதிவு செய்யப்பட்ட செய்யுட்கள் செல்வாக்கு இழந்து, மக்களுக்கு எளிதில் புரியக்கூடிய - மக்களை எளிதில் சென்றடையக் கூடிய உரைநடை வளர்ச்சியடையத் தொடங்கிற்று. ஐரோப்பியர்கள் - குறிப்பாக வீரமாமுனிவர், டாக்டர் கால்டுவெல், டாக்டர் ஜி. யு. போப், சீகன் பால்கு போன்றவர்கள் தமிழ் உரை நடை வளர்ச்சிக்கு ஆற்றிய பணி மிகவும் சிறப்பானது.

இலக்கியம்

இலக்கியப் போக்கு


இலக்கியம் தோன்றுவதற்கு ஒரு பின்புலம் உண்டு என்பது பற்றியும், ஒரு படைப்பாளன் உருவாவதற்கும் பின்புலம் உண்டு என்பது பற்றியும் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த இலக்கியப் போக்குப் பற்றி இனிப் பார்ப்போம்.


நாடோடிக் கூட்டமும் இலக்கியமும்


நிலையான குடியிருப்பு அமைத்துக் கொள்ளாமல் அலைந்து திரிந்த நாடோடிக் கூட்டத்தவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், மக்களை மகிழ்வித்தலையும், பொழுது போக்குதலையும் மட்டுமே நோக்கமாகக் கொண்ட, வாய்மொழி இலக்கியங்கள் தோன்றின. அவற்றில் ஒரு படைப்புக்குரிய படைப்பாளர்கள் பலர் (Collective Authorship). கேட்பவர் எல்லோரும் நுகர்பவர்களாகப் பங்கேற்றனர் (All Listeners Are Audience). கதை சிறப்பிடம் பெற்றது. கேட்பவர்கள் இரவு நேரங்களில் தீயை மூட்டி அதைச் சுற்றி அமர்ந்து கொண்டு கேட்க, கதை சொல்லுதல் மரபாக இருந்தது. இவ்வாறு தீயைச் சுற்றி இருந்து சொன்ன கதையின் வளர்ச்சியே பியோவூல்ப் (BEOWULF) எனும் காப்பியம்.


கதை சொல்பவரின் நினைவாற்றலிலேயே இலக்கியங்கள் வாழ்ந்தன. நினைவாற்றல் மிகுந்தவன், மிகவும் மதிக்கப்பட்டான். எடுத்துரைத்தல், வருணனை போன்றவை சிறப்பிடம் பெற்றன.


நிலவுடைமையும் இலக்கியமும்


நாடோடிக் கூட்டமாக அலைந்து திரிந்த மக்கள், இது எனது அது உனது என உரிமையும் எல்லையும் வரையறை செய்த பொழுது குடியிருப்புத் தொடங்கியது. குடியிருப்பின் வளர்ச்சியாக நிலவுடைமைச் சமுதாயம் உருவாகியது. குழுத்தலைவர்கள் ஆட்சி உருவாகியது. இலக்கியத்தில் துதிபாடலும், மகிழ்வூட்டலும் பாடு பொருள்களாயின.


முடியாட்சியும் இலக்கியமும்


குழுத்தலைவர்கள் குறுநில மன்னர்களாகவும், மன்னர்களாகவும், வளர்ச்சியடைந்த, முடியாட்சி மலர்ந்த காலகட்டத்தில் துதிபாடுதலை மையமாகக் கொண்ட இலக்கியங்கள் தோன்றின. துதிபாடுதல் தன்னிகரற்ற தலைவனை உருவாக்கியது.


குடியாட்சியும் இலக்கியமும்


ஆணவப் போக்குடைய அரசர்களின் ஆட்சிக்கு எதிராகப் போர்க்குரல்கள், போராட்டங்கள் எழுந்தன. சாக்ரட்டீசு போன்ற சமூகச் சிந்தனையாளர்களின் கருத்துகள் செல்வாக்குப் பெற்றன. தட்டிக் கேட்கும் உரிமை குடியாட்சி மலர வாய்ப்பளித்தது. மன்னன் அவனைச் சுற்றியிருந்த சிறு குழுவினர் ஆகியவர்களிடமிருந்து விலகி, வாசகர் வட்டம் விரிவடைந்து கேட்போர் அல்லது படிப்போர் பொதுமக்களாயினர். அச்சு இயந்திர அறிமுகமும், உரைநடை வளர்ச்சியும், புதினம், சிறுகதை, புதுக்கவிதை போன்ற புதிய இலக்கிய வகைகள் தோன்றுவதற்குரிய புதிய சூழலை உருவாக்கின. இலக்கியம் பொதுமக்கள் உடைமைப் பொருளாகியது.


மிகச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையிலான எளிமை இலக்கியத்தில் புகுத்தப்பட்டது. பாடுபொருளும், மேல் மட்ட மக்களின் வாழ்க்கை நிலையிலிருந்து நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கைச் சிக்கல்களை - அடிமட்ட மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை வெளிப்படுத்துவனவாக அமைந்தன.

இலக்கியம்

உலக அளவில், இன்னதுதான் இலக்கியம் என்னும் வரையறை தோன்றுமுன்பு, எழுதப்பட்டவை எல்லாம் இலக்கியம் என்ற கருத்து ஒரு காலத்தில் நிலவியது. சமயம், வரலாறு, நிலவியல், மருத்துவம் முதலியவையும் இலக்கியங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஏனெனில் இவை எல்லாவற்றுக்கும் வடிவம் ஒரே மாதிரியாக இருந்தது. இவற்றிலிருந்து சமயம் சார்ந்தவற்றை மட்டும் பிரித்து, ஏனையவை இலக்கியம் என்று கூறப்பட்டன. பின்னர்க் கற்பனையும், அழகியலும் சார்ந்தவை தனியாகப் பிரிக்கப்பட்டன. கற்பனைக்கும், உணர்ச்சிக்கும் ஒரு வடிவம் கொடுக்கும் நிலை ஏற்பட்டபோது அது இலக்கியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.


இலக்கியம் பற்றி அறிஞர்கள் கருத்து


தொடக்க கால ஆங்கிலத் திறனாய்வாளர்களில் ஒருவரான, ஸ்டாப் போர்ட் புரூக் (Stopford Brooke) என்பவர், 'கூர் அறிவு படைத்த ஆண்களின் அல்லது பெண்களின் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும், நுகர்பவன் மகிழும்படி, முறைப்படுத்தி அமைப்பதே இலக்கியம்' என்று கூறினார். மேத்யூ அர்னால்ட் (Mathew Arnold) என்பவர், 'இலக்கியம், காலக்கண்ணாடி' என்றார். 'இலக்கியம் என்பது ஒரு சமுதாயத்தின் வெளிப்பாடு. சமுதாயத்தில் விளைந்து, சமுதாயத்தை இயக்க வல்லது. ஒரு சமுதாயத்தை உருவாக்கும் ஆற்றல் பெற்றது' என்று பொனால்டு (Ponald) எனும் திறனாய்வாளர் குறிப்பிடுகின்றார். மைக்கேல் பக்தின் (Michael Bukthin) எனும் உருசிய நாட்டுத் திறனாய்வாளர், 'சமுதாயம் இலக்கியத்தின் பிரதிபலிப்பு' என்று கூறுகின்றார். இலக்கிய எதேச்சதிகாரி ஜான்சன் (Johnson, The Literary Dictator) என்றும் 'அகராதி ஜான்சன்' என்றும் அழைக்கப்படுகின்ற, பேரறிஞர் டாக்டர் சாமுவேல் ஜான்சன், ‘எது இலக்கியம் இல்லை என்று கூறுவது எளிது; எது இலக்கியம் என்று உணரலாமே தவிர உணர்த்த இயலாது’ என்று குறிப்பிடுகின்றார்.


இவ்வாறு இலக்கியம் என்றால் என்ன என்பதற்குப் பல்வேறு வகையான விளக்கங்கள் அல்லது கருத்துகள் வழங்கி வருகின்றன.


தமிழ் இலக்கியம் உள்ளிட்ட உலக இலக்கியங்கள் அனைத்திலும் மேற்குறிப்பிட்ட அறிஞர்களின் கருத்துகள் செயல்படுவதைக் காணலாம்.


இலக்கியம் தோன்றும் பின்புலம்


ஒவ்வொரு செயலுக்கும் அல்லது ஒவ்வொரு வெளிப்பாட்டிற்கும் ஒரு பின்புலம் உண்டு. ஒரு தனி மனிதனின் மகிழ்ச்சிக்கும், துயரத்திற்கும் ஒரு பின்புலம் உண்டு. அதைப்போல, சமுதாயத்தின் விளைபொருளாகிய இலக்கியம் தோன்றுவதற்கும் உறுதியாக ஒரு பின்புலம் உண்டு.


பிரஞ்சுப் புரட்சியைப் பின்புலமாகக் கொண்டு, சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை என்ற செய்திகளைப் பரப்பும் நோக்கத்துடன் பல இலக்கியங்கள் தோன்றின. இந்திய நாட்டு விடுதலையைப் பின்புலமாகக் கொண்டும் பல இலக்கியங்கள் உருவாயின.


ஒரு குறிப்பிட்ட பின்புலம் அல்லது சூழல், ஒரு படைப்பு - அதாவது இலக்கியப் படைப்பு தோன்றுவதற்குரிய காரணமாக அமைகிறது. அதைப்போல, ஒரு படைப்பாளன் உருவாவதற்கும் ஒரு பின்புலம் காரணமாக அமையும். பாரதி உருவாகக் காரணமாக இருந்த சமூக, அரசியல் பின்புலங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே, பின்புலம் என்பது படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.

Thursday, October 21, 2010

புற்று நோய்

புற்று நோய் ஏதோ இனம்புரியாத இயற்கை விளைவுகளால் ஏற்படுவதல்ல மாறாக மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட அதிநவீன வாழ்வுதான் காரணம் என்று மான்செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதனின் உற்பத்தி நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள உடல்ரீதியான மாற்றங்களே சமீப புற்று நோய்க் கட்டிகளுக்குக் காரணம் என்று இவர்கள் கூறுகின்றனர்.

இதனை உறுதி செய்ய அவர்கள் எகிப்திய மம்மிக்களை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான மம்மிக்களை ஆய்வு செய்ததில் ஒரேயொரு மம்மியில் மட்டும் புற்று நோய் இருந்தது உறுதியானது.

பண்டைய எகிப்திய பிரதிகளில் காணப்படும் புற்று நோய்ப் போன்ற நோய்க்கான குறிப்புகள் அனைத்தும் குஷ்ட ரோகத்தினால் ஏற்படும் உடல் ரீதியான அறிகுறிகளை புற்று நோய் என்பதாக அது கூறியுள்ளது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வின் தலைவரான மைக்கேல் ஸிம்மர்மேன் மாம்மிக்களில் கட்டிகள் இருந்ததற்கான அடையாளம் இல்லை என்பதால் புற்று நோய் அந்தக் காலக்கட்டத்தில் இல்லை என்று கூறமுடியும் என்று கூறுகிறார்.

"இதனால் புற்ற்நோய் அல்லது புற்று நோய் உருவாக்கக் காரணிகள் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய வாழ்வு முறையே என்று நாம் கருத இடமுண்டு" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"சுற்றுசூழலில் இயற்கையாக உள்ள எந்த ஒரு கூறும் புற்று நோய்க்கு காரணமாக இருக்கவில்லை. இதனால் இது மனிதனால் ஏற்பட்டுள்ள சீரழிந்த, மாசாகிப்போன சூழ்நிலைகளால் உருவானதே" என்று நாம் கூற முடியும்." என்று சக ஆய்வாளரும் பேராசிரியருமான ரொசாலி டேவிட் கூறுகிறார்.

அதாவது எய்ட்ஸ், புற்று நோய் என்பதெல்லாம் ஆதிகாலம் தொட்டே இருந்து வருபவை என்ற பொய்யை மருத்துவ ஆய்வும் கார்ப்பரேட் ஆய்வும் கூறிவரும் இந்த நிலையில் புற்று நோய்க்கு ஒரு வரலாற்றுப் பார்வையை அளிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு காலத்தின் உடல்களை ஆய்வு செய்ததில் நவீன சமூகங்களுக்கு கிடைத்த செய்தி என்னவெனில் "புற்று நோய் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டதே" என்பதுதான் என்று இந்த ஆய்வாளர்கள் அடித்து‌க் கூறுகின்றனர்.

லேப்டாப் வெப்பத்தில் மின்சாரம்

லேப்-டாப்பை பயன்படுத்தும் போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை சென்னை அண்ணா பல்கலை இ.சி.இ., மாணவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

அம்மாணவரை, துணைவேந்தர் மன்னர் ஜவகர் பாராட்டினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ., பிரிவில் மூன்றாம் ஆண்டில் படிக்கும் மாணவர் சன்னிசர்மா.

அமெரிக்காவின் இல்லினோயிஸ் பல்கலைக்கழகத்தில் படித்த இம்மாணவர், பின் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் இ.சி.இ., பிரிவில் சேர்ந்தார். சன்னிசர்மா, லேப்-டாப்பை பயன்படுத்தும் போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார்.

தனது கண்டுபிடிப்பு குறித்து மாணவர் சன்னிசர்மா கூறியதாவது:

லேப்-டாப்பை பயன்படுத்தும் போது, குறிப்பிடத்தக்க அளவு வெப்பம் வெளியாகிறது. இந்த வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டேன். கடந்த இரண்டு ஆண்டு முயற்சியின் மூலம் அதில் வெற்றி கண்டுள்ளேன். இதன்படி, ஒரு வகை படிகத்தை பயன்படுத்தி, "லேப்-டாப்'பை பயன்படுத்தும் போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. "பைரோ எலக்டிரிக் எபெக்ட்' என்ற முறையின்படி, வெப்ப சக்தி, மின் சக்தியாக மாற்றப்படுகிறது.லேப்-டாப் வெப்பம் மூலம் 3.8 வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதன் மூலம், எல்.இ.டி., பல்பை எரிய வைக்க முடிகிறது. இதற்கு 300 ரூபாய் வரையே செலவானது. இந்த மின்சாரத்தை பயன்படுத்தி லேப்-டாப்பை மீண்டும், மீண்டும் "சார்ஜ்' செய்ய முடியும்.மேலும் மொபைல்போன் உள்ளிட்ட கருவிகளையும் "சார்ஜ்' செய்ய முடியும். இதுமட்டுமின்றி, வாகனங்கள், விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு வெப்பத்தை உருவாக்கும் கருவிகள் மூலமாகவும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.என் கண்டுபிடிப்பிற்கு, "பேடன்ட்' வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

மேலும் குளிரிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறேன். இவ்வாறு சன்னிசர்மா கூறினார். அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் முன்பாக, மாணவர் சன்னிசர்மா தனது கண்டுபிடிப்பை செயல்படுத்திக் காட்டினார். அப்போது, லேப்-டாப்பில் இருந்து வெளியாகும் வெப்பத்திலிருந்து உருவான மின்சாரம் மூலமாக, எல்.இ.டி., பல்பு எரிய வைத்து காண்பிக்கப்பட்டது.

அம்மாணவரை துணைவேந்தர் மன்னர் ஜவகர் உள்ளிட்ட பேராசிரியர்கள் பாராட்டினர்.அதேபோல, ஆர்கிடெக்சர் தொடர்பான போட்டியில், "ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர்' தென்மண்டல அளவில் முதல் பரிசு பெற்றுள்ளது. மேலும் பி.ஆர்க்., இறுதியாண்டு மாணவர்கள், பாகிஸ்தானில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் துணைவேந்தர் மன்னர் ஜவகர் பாராட்டினார்.

Saturday, September 25, 2010

புவிக்கோளத்தின் வாழ்வும் இறப்பும்

அதனுடைய 4.5 பில்லியன் வருட காலங்களில் எமது பூமி படிப்படியாக தனது வெப்பத்தை இழந்து வந்துவிட்டது. மிகுந்த வெப்பம் கொண்ட கிரகமாக பிறந்து இன்று சமுத்தரங்களால் சூழப்பட்டு மனிதனால் அறியப்பட்ட வரைக்கும் அண்டவெளியில் ஒரே ஒரு நீல நிற கோளமாக சஞ்சரிக்கின்றது பூமி. ஆனால் வாசிங்டன் பல்கலைக்கழக வானவியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்தப்படி பூமி அதன் ...




அழிவுப்பாதையில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது. எனப்படுகிறது. அவர்களுடைய கருத்துப்படி 4.5 பில்லியன் வருடம் என்பது பூமி தனது சூரியனின் கடிகாரத்தில் மு.ப 4.30 சென்றடைந்துவிட்டதற்கு சமம் எனப்படகின்றது இதன்படி மு.ப 5.00 மணிக்கு உலகினை 1 பில்லியன் வருடம் ஆட்சிசெய்து வந்த விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் என்பன முடிவுக்கு வரும். தொடர்ந்து காலை 8.00 மணிக்கு சமுத்திரங்கள் ஆவியாகத்தொடங்கும் எனப்படகிறது. மதியம் அதாவது 12 பில்லியன் வருடங்களுக்கு பின் எமது சூரியன் தனது ஒளியினை இழந்து பாரிய சிவந்த ஒளிப்பிண்டம் போல் காட்சியளிக்கும். கோள்கள் சூரியனால் கவரப்பட்டு மறைக்கப்படும் இந்தவேளையில் பூமியும் இந்த அண்டவெளியில் உருக்குலைந்து மறைந்து போகும்.





என்கின்றனர் அவாகள். அந்தவகையில் எமது கோளினுடைய மறைவு இன்னும் 7.5 பில்லியன் வருடங்களுக்கு அப்பால் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். ஆனால் மக்கள் இதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் என கூறும் வாசிங்டன் பல்கலைக்கழக வானவியல் அறிஞர் Donald Brownlee “நாம் இருக்கின்ற இப் பூமி எங்களுக்கு கிடைத்த அரிய செல்வம் நாம் இப் பூமியில் வாழ்கின்ற இக்காலம் மிகவும் அரியது ஆகையால் இப் பூமியை பாதுகாப்பதில் நாம் ஆர்வம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்” என்கிறார். இவருடைய நூலாகிய “பூவிக் கோளத்தின் வாழ்வும் இறப்பும்” (The Life and Death of Planet Earth) என்ற நூல் பூமியின் இரண்டாவது அரைப்பகுதியில் உயிரின வாழ்க்கையின் சாத்தியக் கூறுகள் பற்றி விரிவாக ஆராய்கின்றது. Ward and Brownlee's என்பவர்களின் “அரிதான பூமி” (Rare Earth) என்ற நூல் பெருமளவில் பேசப்பட ஒரு நூல் என்பதுடன் அதிகளவில் விற்பனையாகிய நூலும் அகும்.




அண்டவெளியின் பல்லாயிரக்கணக்கான கோளங்களில் புவியின்
தனித்துவத்தினையும், சிறப்பத்தன்மையினையும் ஆராய்கின்றது இந்நூல். “பூவிக் கோளத்தின் வாழ்வும் இறப்பும்” (The Life and Death of Planet Earth) என்ற நூலில் ஆசிரியர் புவியில் உயிரினங்களின் இறுதிக்காலங்களை விபரிக்கும்போது அது உயிரினங்களின் ஆரம்ப காலங்களை ஒத்ததாக இருக்கும் என்கிறார். புவியெங்கும் இருள் படரத்தொடங்கும்போது நிலப்பரப்பை காட்டிலும் சமுத்திரங்கள் சூடானதாக மாறும் அப்போது அழிந்த உயிரினங்கள் போக எஞ்சிய ஒருகல அங்கிகள், பற்றீறியாக்கள் கடலில் வாழ்விடத்தினை அமைத்துக்கொள்ளும். இறுதியில் இவ்வுயிரினங்களும் அழிந்துவிடும் என்கிறார் இந்நூலாசிரியர்.




இதற்குள் மனித இனம் வேற்று கிரகம் ஒன்றினை கண்டறிவதற்கான அவல் அதிகரித்து வந்தாலும். அக்கிரகங்களில் உயிரினங்கள் இருப்பது கண்டறியப்பட்டாலும் அவை புவியில் உள்ள மனித இனத்தின் டீ.என்.ஏ தன்மைகளுடன் பொருத்தமற்றவையாகவே இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். ஆகவே இது ஓர் பாரிய சவாலாக மனித இனத்திற்கு இருக்கும் எனப்படுகிறது. இதற்கிடையில் வானியல் ஆய்வாளர்கள் எமது அண்டவெளி(Universe) மிகவும் பழையது என்ற கருத்துக்களையும் வெளியிட்டள்ளனர்.

Friday, September 24, 2010

மிதக்கும் நகரம்!

உலகின் பெரும் கப்பல்கள் பற்றி படித்திருப்போம். ஆனால் அவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், `மிதக்கும் நகரமாய்’ ஒரு கப்பல் உருவாக போகிறது. அப்படியென்ன அது பிரமாதம் என்கிறீர்களா? ஒரு மைல் தூரத்துக்கு 25 மாடிக் கட்டிடங்கள் அமைந்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அதுதான் `பிரீடம் ஷிப்’ என்ற மிதக்கும் நகரம்! இதன் நீளம் ஆயிரத்து 317 மீட்டர்கள்.



அகலம் 221 மீட்டர்கள். உயரம் 103 மீட்டர்கள். இந்தக் கப்பல் ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட உயரமானது. இரண்டு கால்பந்து மைதானங்கள் சேர்ந்த அகலம் கொண்டது. இவ்வளவு பெரிய `மெகா’ கப்பல் கடலில் மிதப்பது மட்டுமல்ல, உலகைச் சுற்றிலும் வலம் வரவும் போகிறது. `பிரீடம் ஷிப்’ பற்றிய எல்லா தகவல்களுமே பிரமிக்க வைக்கின்றன.



இதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மொத்தம் 17 ஆயிரம் குடியிருப்பு பிரிவுகள் அமையும். இக்கப்பல் தொடர்ந்து உலகம் முழுவதும் பயணம் மேற் கொண்டபடி இருக்கும். இங்கு நிரந்தரமாகத் தங்கியிருந்தபடி உலகைச் சுற்றி பார்க்கலாம். இந்தக் கப்பல் தளங்களின் உச்சியில் சிறு விமானங்கள் இறங்கி ஏறும் வகையில், ஆயிரத்து 158 மீட்டர் நீளமுள்ள ஓர் ஓடுபாதையும், விமானங்களை நிறுத்துவதற்கான இடங்களும் அமைக்கபடும்.



உல்லாச படகுகளை நிறுத்தும் பகுதி, ஒரு மிக பெரிய வணிக வளாகம், பள்ளி, கல்லூரி, கோல்ப் மைதானம், சைக்கிள் ஓட்டும் பாதைகள், ஓய்வாய்க் கழிப்பதற்கு 200 திறந்த வெளி பகுதிகள் ஆகியவையும் அமையும். இம்மாபெரும் கப்பலில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் குறைவில்லை. இதில் பல உணவகங்கள், திரையரங்குகள், விளையாட்டு அமைப்புகள் இருக்கும். விளையாட்டு பிரியர்களுக்கு ஏற்ற வசதிகளும் உண்டு. டென்னிஸ், கூடைபந்து, `பவுலிங்’ போன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம்.



நீச்சல் குளம், பசும்புல்பரப்பு, `ஸ்கேட்டிங்’ வளையம், செயற்கைக் கடற்கரையில் அமர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் வசதி போன்றவை உண்டு. ஒவ்வொரு குடியிருப்பிலும் 100 உலக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், கப்பல் செல்லும் கடலை ஒட்டிய நாடுகளின் தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்ச்சிகளையும் காணலாம். இணைய வசதியும் உண்டு. இந்த மிதக்கும் நகரத்துக்கு என்று ஒரு தனி பாதுகாப்பு படைம் உண்டு.



தவிர, கப்பலின் நுற்றுக்கணக்கான பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு பயிற்சி அளிக்கபடும். இக்கப்பலின் மற்றொரு சிறப்பம்சமாக இது இயற்கைக்கு உகந்ததாக இருக்கும். இதன் கழிவுகளால் கடல் பாதிக்கபடாமல் அவை மறுசுழற்சி செய்யபடும் அல்லது பாதுகாப்பான முறையில் எரித்து அழிக்கபடும். இவ்வளவு பெரிய கப்பலை கடலில் நகர்த்துவது என்பது எளிதான விஷயமல்ல.



அதற்கென்று, தலா 3 ஆயிரத்து 700 குதிரைசக்தி திறன் கொண்ட 100 டீசல் இயந்திரங்கள் பயன்படுத்தபடும். கற்பனைக்கு அப்பாற்பட்ட இக்கப்பலை கட்டி முடிக்க முன்றாண்டுகளும், பல்லாயிரம் கோடி ருபாயும் ஆகும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஆதங்கமான ஒரே விஷயம், இக்கப்பலில் நிரந்தரக் குடியிருப்பு பெறவும், பயணம் செய்யவும் கோடீசுவரர்களால் மட்டுமே முடியும்!

பூமிக்கு அருகில் ஜூபிடர்

புதுடெல்லி: ஜூபிடர் (வியாழன் கோள்) பூமிக்கு அருகில் வந்திருக்கிறது. அது பூமியில் இருந்து 368 மில்லியன் மைல் தொலைவில் இருக்கிறது. கடந்த 1963-ம் ஆண்டிற்குப் பின் இப்பொழுது தான் பூமிக்கு அருகில் வந்திருக்கிறது.



இதை மாலை நேரத்தில் காணலாம். நள்ளிரவில் உச்சி வானில் அது தெரியும். அதேபோல யுரேனஸும் பூமிக்கு வெகு அருகில் வந்துள்ளது. இரண்டையும் மிகப் பிரகாசமான தோற்றத்தில் இன்று இரவு பார்க்க முடியும். வானுலக அதிசயம் குறித்த ஆர்வலர்களுக்கு இன்று இரவு இரட்டை மகிழ்ச்சியாக இருக்கும்.



இந்த 2 கிரகங்களும் டிஸ்க் வடிவத்தில் பிரகாசமாக காணப்படுவதை அவர்கள் கண்டு களிக்கலாம். இது குறித்து சயின்ஸ் பாபுலரய்சேஷன் அசோசியேஷன் ஆப் கம்யூனிகேட்டர்ஸ் அன்ட் எஜுகேடர்ஸ் அமைப்பின் சந்திரபூஷன் தேவ்கன் கூறியதாவது,



சூரியன் மறைந்த பிறகு கிரகங்களிலேயே மிகப் பெரிய கிரகமான ஜூபிடர் வடக்கில் மிகவும் பிரகாசமாகத் தெரியும். பைனாகுலர் அல்லது தொலைநோக்கி மூலம் நன்றாகப் பார்க்கலாம். வெறும் கண்ணாலும் பார்க்கலாம். இது இன்னும் சில மாதங்களுக்கு காணப்படும்.

Monday, September 13, 2010

நலம் காட்டும் கடிகாரம்!

நலம் காட்டும் கடிகாரம்! `என்ன நல்லா இருக்கீங்களா?’
இப்படி நலம் விசாரிப்பது நமது பண்பாடு. இனி யாரும் உங்களை இப்படிக் கேட்டால் நீங்கள் மணி பார்ப்பதுபோல் கடிகாரத்தைப் பார்த்து `நலமாகத்தான் இருக்கிறேன்’ என்று பதில் சொல்லலாம். ஆமாம் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்பதைக் காட்டும் கடிகாரம் வந்துவிட்டது.



ஐரோப்பிய ஆய்வுக்குழு ஒன்று நவீன கைக்கடிகாரம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இதில் எலக்ட்ரானிக் பாலிமர் மற்றும் நவீன சென்சார் இருக்கும். இதை வழக்கமான கடிகாரம்போல் கையில் அணிந்து கொள்ளலாம். இதில் இருக்கும் நவீன கருவிகள் நோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்காணித்து அறிவிக்கும்.



வியர்வை, உடல் வெப்பம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை கண்காணித்து நோய்த்தொற்றை கண்டுபிடிக்கும். இதற்காக எப்போதும் மின்காந்த அலைகளை உடலில் பரப்பிய வண்ணம் செயல் படும்.



மாரடைப்பு ஏற்படுவது, ரத்தம் உறைவது, ஈரப்பதம் குறைவது போன்ற பெரும்பாலான வியாதிகளின் அறிகுறிகளை மருத்துவ பரிசோதனைக்குச் செல்லாமலே காட்டிவிடும். வியாதிகளை ஆரம்பத்திலே கண்டுபிடித்தால் எளிதில் குணமாக்கி நலமாக வாழலாம்தானே!

40 கிலோ எடையில் மொபைல் போன்!

இன்று, அனைவரது கை களிலும், சில மில்லி கிராம் எடையில், தவழும் மொபைல் போன்கள், ஆரம்ப காலத்தில், தூக்க முடியாத அளவிற்கு, “வெயிட்’டாக இருந்தது என்றால், நம்ப முடி கிறதா? ஆரம்ப காலத்தில் டாக்சிகள், போலீஸ் வாக னங்கள், ஆம்புலன்ஸ்களில் மட்டுமே, “மொபைல் போன்’களின் முன்னோடியாக கருதப்படும், “ரேடியோ போன்கள்’ பொருத்தப்பட்டன; ஆனால், அவற்றில் இருந்து, பிற போன்களை தொடர்பு கொள்ள முடியாது.



“லார்ஸ் மேக்னஸ் எரிக்சன்’ என்பவர், தன் காரில் டெலிபோனை 1910ல் பொறுத்தினார். ஆனால், இது, “ரேடியோ போன்’ அல்ல. காரில் எங்காவது செல்வார்; டெலிபோன் இணைப்பு ஒயர்கள் இருக்கும் இடத்தில், தன் காரை நிறுத்தி, “நேஷனல் டெலிபோன் நெட்வொர்க்’ உடன் தொடர்பு கொண்டு, தான் பேச வேண்டிய இடத்திற்கு பேசுவார்.



ஐரோப்பாவில், பெர்லின்-ஹம்பர்க் நகரங்களுக்கிடையில் இயங்கிய பாசஞ்சர் ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில், ரேடியோ போன் 1926ல் அமைக்கப்பட்டது; அதே ஆண்டில், ஆகாய விமானங்களிலும் பொருத்தப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மன் டேங்க்குகளிலும், 1950ம் வாக்கில், “ரைன்’ என்ற கப்பலிலும், ரேடியோ டெலிபோன்கள் பொருத்தப்பட்டன.



காரில் இருந்தபடியே மற்ற போன்களுக்கு தொடர்பு கொள்ளக் கூடிய வகையில், முழுமையான, “ரேடியோ போன்கள்’ 1956ல் ரஷ்ய இன்ஜினியர்கள் ஷாப்ரோ, சகார்ஷென்கோ ஆகியோர் கண்டுபிடித்தனர். இவற்றிலிந்து 20 கி.மீ., சுற்றளவில் தொடர்பு கொள்ள முடியும். தற்போதைய மொபைல் போன்களின் முன்னோடி, 1947ல் கண்டுபிடிக்கப்பட்டது. டக்ளஸ் எச் ரிங், ரே யெங், பெல் லேப்ஸ் ஆகிய இன்ஜினியர்கள், அறுகோண மொபைல் போன்களை வாகனங்களில் பொருத்தினர்.



இதற்காக, தனி டவர்களை அமைத்து, “சிக்னலை’ வாகனங்களில் பெறும் வகையில் வடிவமைத்திருந்தனர். ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஜினியராக, லியோனிட் குப்ரியானோவிச், மாஸ்கோவில், போர்டபிள் மொபைல் போனை 1957ல் அமைத்தார். பின்னர் இது, “எல்கே-1 ரேடியோ போன்’ என்றழைக் கப்பட்டது. முன்னர் வடிவமைத்ததை விட, கையடக்கமான மொபைல் போனாக இருந்ததுடன், பிற போன்களை தொடர்பு கொள்ளும் டயலிங் வசதியும் இருந்தது.



இதன் மொத்த எடை மூன்று கிலோ; 20 முதல் 30 முதல் கி.மீ., வரை, இதிலிருந்து தொடர்பு கொள்ள முடியும். தொடர்ந்து 30 மணி நேரம் பேச முடியும். 1958ல், பாக்கெட் சைஸ் மொபைல் போன்களை தயாரித்தார்; இதன் எடை 500 கிராமாக இருந்தது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 1950ல் மொபைல் போன்கள் வந்தன. எரிக்சன் உருவாக்கிய, “எம்.டி.ஏ., மொபைல் போன், 1956ல் ஸ்வீடன் நாட்டில் அறிமுகப்படுத்தப் பட்டது; இதன் எடை 40 கிலோ. பின்னர், 1965ல் ஒன்பது கிலோ எடையாக குறைக்கப்பட்டது.



கார்களில் மட்டுமே பொருத்தப்பட்டதால், எடை ஒரு பிரச்னை யாக இருந்ததில்லை. ஐரோப்பாவில் முதன் முதலில் மொபைல் போன் உபயோகித்தவர் என்ற பெருமையை இங்கிலாந்து மன்னர் பிலிப் பெற்றார். 1957ல் தன் ஆஸ்டன் மார்டின் காரில் பொருத்தி, மகாராணி யுடன் பேசு வதற்காக பயன்படுத்தினார். அப்போதே காதலியுடன் பேச, மொபைல் போன் பயன்பட்டுள்ளது! நவீன மொபைல் போன்களுக்கான தொழில்நுட்பம் 1970ல் அமெரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டது.



இதுவரை கார்களில் மட்டுமே பொருத்தப்பட்ட மொபைல் போன்களை, கைகளில் எடுத்துச் செல்லும் வகையில், மோட்டராலோ கம்பெனி ஆராய்ச்சியாளர் மார்ட்டின் ஹூப்பர் உருவாக்கினார். முதல் அழைப்பை, ஏப்ரல் 3, 1973ல், தன் சக போட்டியாளர் களான ஜோயல் ஏஞ்சல் மற்றும் பெல் லேப்ஸ் ஆகியோரிடம் பேசினார். பொதுமக்கள் பயன் பாட்டிற்கான முதல் ஜென ரேஷன் (1ஜி) மொபைல் போன் 1979ல் ஜப்பானில், என்.டி.டி., நிறுவனம் அறிமுகப்படுத்தியது.



அதன் பின், படிப்படியாக, மொபைல் போன்கள் உலகம் முழுவதும் பரவி, தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று கம்ப்யூட்டரையே கையில் கொண்டு சேர்க்கும் சாதனமாக, பிர மாண்ட வளர்ச்சி பெற்றுள் ளது. இன்று, மொபைல் போனில் சினிமா பார்க் கலாம்; கேம்ஸ் ஆட லாம்; “மொபைல் பேங்கிங்’ வசதி உள்ளது. பிடித்தமானவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம்; தலைமறைவு குற்றவாளி களையும் கண்டறியலாம்; இவ்வளவு ஏன்… காதலர்களுக்கு தூது செல்லும் நவீன, “புறா’வாகவும் மாறி விட்டதே!

சிலந்தி மனிதன் போல

சுவரில் நடக்க உதவும் ஷூ

ஸ்பைடர் மேன் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. சிலந்தி மனிதனான ஸ்பைடர்மேன் அநாயசமாக சுவர் விட்டு சுவர் தாவிச் செல்லும் காட்சியை குழந்தைகள் பிரமிப்புடன் ரசிப்பார்கள்.



அதுபோல் உண்மையிலேயே சுவரில் தாராளமாக நடந்து செல்ல முடிந்தால் எப்படி இருக்கும் ஆம் விஞ்ஞானிகள் இதை சாத்தியமாக்கி இருக்கிறார்கள். இதற்காக ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.



இந்தக் கருவி ஷூவின் நவீன வடிவம்போல உள்ளது. துணையாக குச்சியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை விரும்பாதவர்கள் குச்சியின்றியும் நடக்கலாம். அவர்களுக்கு ஒருவித உபகரணம் வழங்கப்படும். இந்த ஷூவை மாட்டிக் கொண்டு சிலந்தி மனிதன் (ஸ்பைடர் மேன்) போல நீங்களும் சுவரில் நடக்கலாம்.



இந்த ஷூ இரு அடுக்குகளைக் கொண்டிருக்கும். அடியில் உள்ள அடுக்கில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கும். ஷூவின் அடியில் உள்ள தகட்டில் ஏராளமான ண்துளைகள் இருக்கும். நாம் நடக்க ஆரம்பிக்கும்போது ஏற்படும் அழுத்தம் முதல் அடுக்கில் உள்ள நீரை மேலேறச் செய்யும்.



இதனால் கீழடுக்கில் ஏற்படும் வெற்றிடம் சுவருடன் ஒரு பிடிப்பை ஏற்படுத்துகிறது. இது மனிதனை தாங்கி நிறுத்தும். இதனால் நாம் சுவரில் நடந்து செல்ல முடியும். அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக்கழகம் இதை வடிவமைத்துள்ளது.

Sunday, August 29, 2010

சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்

சூரியனை சுற்றியுள்ள வட்டப் பாதைக்கு வெளியே சூரியன் அளவுக்கு புதிய கிரகம் இருப்பதையும், இதுவரை இல்லாத மிகச் சிறிய கோள் உட்பட 7 புதிய கோள்களையும் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி ஜெனீவாவில் இரோப்பியன் சதர்ன் அப்சர்வேடரி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது: சூரிய சுற்றுப் பாதைக்கு வெளியே சூரியனைப் போன்ற, அதே அளவில் கிரகம் ஒன்று இருப்பது விண்வெளி ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அந்த புதிய கோளின் சுற்று பாதையில் 7 கிரகங்கள் உள்ளன. அதில் ஒரு கிரகம் மிகச் சிறியது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் மிகச் சிறியதான அது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியம் அளித்துள்ளது.





புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களில் பெரும்பாலானவை பூமியை விட 13 முதல் 25 மடங்கு பெரியவை. ஒரே ஒரு கிரகம் மட்டுமே பூமியைப் போல 1.4 மடங்கு உள்ளது. பூமியை தவிர்த்து சூரிய மண்டலத்திலும், அதற்கு வெளியிலும் உள்ள கோள்களில் இதுவே மிகச் சிறியது என கருதப்படுகிறது. ‘‘புதிய கிரகங்கள் அனைத்தும் பாறைகள், பனிக்கட்டிகளால் ஆனவை. அவை உறுதியானவை. அதன் மேற்பகுதியில் ஹைட்ரஜன், ஹீலியம் வாயு இருக்கலாம். இந்த கிரகங்களில் உயிரினம் வசிக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை’’ என்று ஒரு விஞ்ஞானி தெரிவித்தார்.

3டி படத்தை இனி தொட்டும் பார்க்கலாம்

3டி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஹாலிவுட்டில் பல சினிமாக்கள் 3டி-யில் வருகின்றன. வீட்டு நிகழ்ச்சிகளை 3டி-யில் படம் பிடிக்கும் கேமராக்கள் வந்துவிட்டன. 3டி ஒளிபரப்பு அனுமதிக்கு டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்கள் விண்ணப்பித்துள்ளன.





3டி காட்சிகளை பார்த்து ரசிக்கும் டிவியை எல்ஜி, சோனி, பானாசோனிக் நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன. இந்நிலையில், திரையில் தெரியும் 3டி காட்சிகளை தொட்டு, தடவிப் பார்க்கும் வசதியை ஜப்பான் தேசிய அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.



திரையில் ஒரு பலூன் வருகிறது என வைத்துக்கொள்வோம். அதை எடுப்பதுபோல கையை கொண்டு சென்றால், நம் கையில் பலூன் தவழ்வதுபோல காட்சி மாறும். பலூனின் பிம்பம் நமது கையிலேயே விழும். பலூனை தத்ரூபமாக நம் கையிலேயே பார்க்கலாம். குத்துவது போல விரலை கொண்டு சென்றால், பலூன் பிம்பம் மாறுதல் அடைந்து குழி உருவானது போல காட்சியளிக்கும்.



பிரத்யேக கேமராக்களின் உதவியுடன் நமது கைகளின் இயக்கம் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது அதற்கேற்ப காட்சிகள் மாறுகின்றன. சுகுபா நகரில் நேற்று நடந்த அறிமுக நிகழ்ச்சியின்போது இதை அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் செய்துகாட்ட, பார்த்தவர்கள் மிரண்டே போய்விட்டனர். முக்கியமான ஆபரேஷன்கள், வீடியோகேம் ஆகியவற்றில் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர்.

Monday, August 23, 2010

கருந்துளை சிக்கியது

முதன் முறையாக ஒரு கருந்துளையின் இருப்பிடம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை கருந்துளை கற்பனைப் பொருளாகவும் கருத்தளவில் மட்டுமே நிரூபிக்கப்பட்டதாவும் இருந்தது.



பூமிக்கு மிக அருகில் (பயப்பட வேண்டாம்) 7800 ஒளியாண்டுகளுக்கு அப்பால் சிக்னஸ் என்ற நட்சத்திரக் கூட்டத்தில் ஒரு கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. black_holeபக்கத்திலிருக்கும் ஒரு அப்பாவி நட்சத்திரத்தின் புற அடுக்கு வாயுவை அந்த கருந்துளையானது உறிஞ்சிக் கொண்டிருப்பது தெரிந்தது.



நேரடியாக அந்த நட்சத்திர வாயு அதனுள் நுழையாமல் சற்று சுற்றி வளைத்தபடி செல்வதால் அதிலிருந்து அபரிமிதமாக எக்ஸ் கதிர்கள் வெளிப்படுகிறது. இந்த எக்ஸ் கதிர் வெளிப்பாடுதான் கருந்துளையைக் காட்டிக் கொடுத்திருக்கிறது.



கருந்துளைகள் என்பவை தமது சொந்த நிறையீர்ப்பு அழுத்தத்தால் சுருங்கி நசுக்கப்பட்டு ஒற்றைப் புள்ளியாக மாறிவிட்ட நட்சத்திரம். சுருங்கிவிட்டபோதிலும், அளப்பரிய தனது நிறையீர்ப்பு விசையால் ஒளிகூட அதைவிட்டு வெளியேற முடிவதில்லை.



அதனால் கருந்துளை நமது பார்வையில் படுவதில்லை. அதன் இருப்பை மறைமுகமான அனுமானத்தின் பேரில்தான் ஊர்ஜிதம் செய்ய வேண்டியிருந்தது. இப்போது நேரடியான சாட்சியம் கிடைத்ததால் கருந்துளையின் இருப்பு நிச்சயமாகி உள்ளது என சர்வதேச விண்வெளிக்குழு அறிவித்துள்ளது.

Friday, August 13, 2010

வால் நட்சத்திர தோற்றத்தில் புதிய கிரகம்

வால் நட்சத்திர தோற்றத்துடன் புதிய கிரகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது சூரியன் அருகே ஒரு புதிய கிரகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இது வால் நட்சத்திரம் போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது.

இதை நாசா விஞ்ஞானிகள் “ஹப்பிள் ஸ்பேஸ்” டெலஸ்கோப் மூலம் கண்டுபிடித்தனர். அதற்கு ஒசிரிஸ் என்ற புனைப்பெயர் சூட்டியுள்ளனர்.

இது பூமியில் இருந்து 153 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. “ஜுபிடர்” கிரகத்தைவிட சிறியது. முதன் முதலாக கடந்த 1999-ம் ஆண்டு இதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

ஆய்வு மேற்கொண்ட போது விண்வெளியில் வீசிய பலத்த காற்றின் போது இந்த கிரகம் சூரியனை சுற்றி வருவது தெரிய வந்தது. இது கடுமையான வெப்பத்தை வெளிப்படுத்த கூடியது.

இந்த கிரகத்துக்கு எச்டி 209458 பி என அதிகார பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது.

Sunday, July 11, 2010

சூரிய குடும்பத்துக்கு வெளியே இளமையான கோள் கண்டுபிடிப்பு

சூரியக்குடும்பத்துக்கு வெளியே புதிய இளமையான கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கோள் உருவாக்கம் பற்றிய விதிகளை இக்கோள் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

சூரியனிலிருந்து சனி கிரகம் உள்ள தொலைவுக்கு சமமாக, சூரியக்குடும்பத்துக்கு வெளியே 63.4 ஒளி ஆண்டுகள் தொலைவில் பெட்டா பிக்டோரிஸ் என்ற கோள் உள்ளது. இது தன்மையில் சூரியனை ஒத்துள்ளது. இக்கோள் உருவாகி ஒரு கோடி 20 லட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கலாமென்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆகவே இளமையான கோளாக கருதப்படுகிறது. சூரியனை ஒத்துள்ள இக்கோள், குறுகிய காலத்தில் இந்த வடிவத்தை பெற்றுள்ளது. ஆனால் சூரியனின் வயதோ, 450 கோடி ஆண்டுகள். பெட்டா 2003ல் கண்டுபிடிக்கப்பட்டது. 2009ல் அது ஒரு கோள்தான், நட்சத்திரமல்ல என்று உறுதி செய்யப்பட்டது.

பெட்டா பிக்டோரிஸ் கோளுக்கு அருகில் அதன் துணைக்கோளாக சுற்றி வரும் ஒரு கோளை விஞ்ஞானிகள், தென் ஐரோப்பிய வானியல் கூடத்தின் மிகப்பெரிய டெலஸ்கோப் மூலம், கடந்த ஆண்டில் கண்டறிந்தனர். இந்த கோளுக்கு பெட்டா பிக்டோரிஸ் பி என்று பெயரிட்டுள்ளனர். பொதுவாக ஒரு கோள், முழுமையான வடிவத்துடன், கோளுக்கேயுரிய தன்மைகளை பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு கோடி ஆண்டுகளாகும் என்று அறிவியல் விதிகள் கூறுகின்றன. பி.டி.20 1790பி என்ற கோள், மிகக் குறைந்தபட்சமாக 30 கோடியே 50 லட்சம் ஆண்டுகளில் உருவானதாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பெட்டா பிக்டோரிஸ் பி உருவாகி, சில லட்சம் ஆண்டுகளே ஆகியிருக்குமென்று தெரியவந்துள்ளது. இக்கோள், வியாழனை விட ஒன்பது மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. சூரியக்குடும்பத்துக்கு வெளியே, இப்போதைக்கு மிக இளமையான கோள் இதுதான் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

உலகின் அதிவேக கார் புகாட்டி வெய்ரான்!

உலகின் அதிவேக காராக உருவெடுத்துள்ளது புகாட்டி வெய்ரான். இதன் வேகம் மணிக்கு 268 மைல்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பூமியிலேயே அதிவேகமான காராக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

காரை ஸ்டார்ட் செய்து கிளம்பியதும் மணிக்கு 60 மைல்கள் என்ற வேகத்தை எட்ட இந்தக் கார் எடுத்துக் கொள்ளும் நேரம் வெறும் 2.5 விநாடிகள்தான். அதேபோல 124 மைல்கள் என்ற வேகத்தை எட்ட 7.3 விநாடிளையும், 186 மைல்கள் என்ற வேகத்தைப் பிடிக்க 15 விநாடிகளையும் மட்டுமே இது எடுத்துக் கொள்கிறது.

புகாட்டி கார் ஏற்கனவே கின்னஸ் சாதனையையும் மேற்கொண்டுள்ளது. அந்தக்காரை ஓட்டிய டிரைவர் பியரி ஹென்றி ரபேனல் அதிகபட்சம் மணிக்கு 265.9 மைல்கள் மற்றும் 269.8 மைல்கள் வேகத்தில் காரை ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

புகாட்டி வெய்ரான் சூப்பர்ஸ்போர்ட் கார், 8 எல் டபிள்யூ 16 என்ஜினில் இயங்குகிறது. இந்த என்ஜின் 12000 குதிரை சக்தியில் இயங்கக் கூடியதாகும்.

ரேஸ்களில் பயன்படுத்தக் கூடிய கார்களுக்கான வடிவமைப்புடன் கூடியதாக இந்த கார் உள்ளதாலேயே இந்த அளவுக்கு மின்னல் வேகத்தில் பயணிக்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, March 1, 2010

The Lost World

The Lost World opened on Broadway at New York City's Astor Theater in February, 1925.

Now wait a minute. The Lost World didn't hit theaters until Memorial Day, 1997. What's going on here?

The Lost World, 1925, One-Sheet A, The Apatosaurus Those of you who are ahead of this article undoubtedly know that Michael Crichton's The Lost World owes its title to a famous novel by Sir Arthur Conan Doyle (of Sherlock Holmes fame) which originally appeared as a serial in the Strand Magazine in London, England beginning in April 1912. It was optioned for a motion picture in 1919 and finally made it to the screen in 1925.

Responsible for the startling state-of-the-art special effects in this wonderful film was none other than Willis H. O'Brien, the genius who would later bring King Kong to life. O'Brien had produced a number of short stop-motion dinosaur films for Thomas Edison in 1917, and did the effects for 1918's The Ghost of Slumber Mountain which is arguably the first "feature-length" dinosaur movie.

The Lost World of 1925 was measured at 9209 feet -- approximately 10 reels (a reel being 1000 feet) -- of 35mm film. It would have run between 104 and 106 minutes depending upon the projection speed. A musical cue sheet indicates that it was intended to be shown at 23 frames per second which would have worked out to 106 minutes, but Variety reported that the film ran 104 minutes on opening night.

Now the fun begins.

Click HERE

Natural History Museum

The Natural History Museum is one of three large museums on Exhibition Road, South Kensington, London (the others are the Science Museum, and the Victoria and Albert Museum). Its main frontage is on Cromwell Road. The museum is home to life and earth science specimens comprising some 70 million items within five main collections: Botany, Entomology, Mineralogy, Palaeontology and Zoology. The museum is a world-renowned centre of research, specialising in taxonomy, identification and conservation. Given the age of the institution, many of the collections have great historical as well as scientific value, such as specimens collected by Darwin. The museum is particularly famous for its exhibition of dinosaur skeletons, and ornate architecture - sometimes dubbed a cathedral of nature - both exemplified by the large Diplodocus cast which dominates the vaulted central hall.
Find out more about Natural History Museum here.
Click HERE

Saturday, February 27, 2010

THE WORLD'S LONGEST ABBREVIATION

What is the world's longest abbreviation?

Our first question is 'why is abbreviation such a long word?'

This abbreviation may just explain it, it is the world's longest abbreviation containing 56 letters:

NIIOMTPLABOPARMBETZHELBETRABSBOM
ONIMONKONOTDTEKHSTROMONT

Meaning: Laboratory for Shuttering, Reinforcement, Concrete and Ferroconcrete Operations for Composite-monolithic and Monolithic Constructions of the Department of Technology of Building Assembly Operations of the Scientific Research Institute of the Organization for Building Mechanization and Technical Aid of the Academy of Building and Architecture of the USSR.

பூமியைப் போன்ற புதிய கிரகம்

பூமியைப் போன்ற தோற்றமுடைய புதிய கிரகத்தை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தில் உயிர் வாழ்வதற்குத் தேவையான தட்ப வெப்ப நிலையும், தண்ணீரும் இருப்பதாக அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும், இந்த புதிய கிரகம் குறித்த ஆய்வில் ஈடுபட்ட குழுவின் தலைவருமான ஸ்டீபன் உத்ரி கூறுகையில், சூரிய குடும்பத்திலிருந்து இது தனித்து வெளியே இருக்கிறது. சிவப்பு நிறத்தில் இந்த கிரகம் காணப்படுகிறது.

இதற்கு OGLE-2005-BLG-390Lb என பெயரிடப்பட்டுள்ளது. பூமியை விட மிகப் பெரிதாக இது இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கிளீஸ் 581 என்ற நட்சத்திரத்தை சுற்றி வந்து கொண்டுள்ளது. இந்தப் புதிய கிரகத்தில் பாறைகள் நிறைந்து காணப்படுவதாக கணித்துள்ளோம். அதேபோல உயிரினங்கள் வசிக்க் கூடிய தட்பவெப்ப நிலையும், தண்ணீரும் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த கிரகத்தில் பூஜ்யம் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை தட்பவெப்பம் நிலவுவதாக கணிக்கப்பட்டுள்ளது. தண்ணீர், திரவ நிலையில் இங்கு இருக்கலாம். சூரியக் குடும்பத்திற்கு வெளியே இதுவரை 200க்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்துமே வாயுக்களால் நிரம்பியவை. ஆனால் இந்தப் புதிய கிரகம் கிட்டத்தட்ட பூமியைப் போலவே இருப்பதாக நினைக்கிறோம். இந்த கிரகத்தின் சுற்று வட்டம் பூமியின் சுற்று வட்டத்தை விட 1.5 மடங்கு அதிகம்.

இந்த கிரகத்தில் பல கடல்களும் இருக்கக் கூடும். பூமியைப் போலவே இது இருப்பதால் இந்தக் கிரகம் குறித்த ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும். எதிர்காலத்தில் பல அரிய தகவல்களும், ஆச்சரிய தகவல்களும் நமக்குக் கிடைக்கக் கூடும். இந்தப் புதிய கிரகம் பூமியிலிருந்து 125 டிரில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்றார் உத்ரி. சிலியில் உள்ள லா சில்லா நகரில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன தொலைநோக்கி மூலம் இந்த புதிய கிரகதத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Friday, February 26, 2010

விண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

விண்வெளியில் சூரிய குடும்பத்துக்கு அப்பால் பல்வேறு சூரியன்களும் அதன் துணை கிரகங்களும் உள்ளன. அவற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.

தற்போது புதிதாக ஒரு சூரியனை கண்டு பிடித்துள்ளனர். இதற்கு பிடி+20 1790 பி என பெயரிட்டுள்ளனர். இது ஜுபிடர் கிரகத்தை விட 6 மடங்கு பெரியது.

இது சூரியனின் சுற்றுப்பாதையில் உள்ள மெர்குரி கிரகத்துக்கு மிக அருகில் உள்ளது. இது பூமியில் இருந்து 83 ஒளி ஆண்டுகள் (லைட் இயர்) தூரத்தில் உள்ளது. ஆனால் அளவில் சூரியனை விட சிறியது.

இந்த புதிய சூரியன் 3 1/2 கோடி ஆண்டு பழமையானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்பு புதிதாக கண்டுபிடித்த கிரகம் 10 கோடி ஆண்டு பழமை வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த புதிய சூரிய கிரகம் குறித்து மரிய குருஷ் கால்லெஷ் மற்றும் ஜான்பர்னஸ் தலைமையிலான சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Thursday, February 18, 2010

ஆங்கில மாதங்களுக்கு பெயர் வந்த விதம்

ஒவ்வொரு மாதத்திற்கும் பெயர் விழாவை நடத்தியவர் 'ஜுலியஸ் சீஸர்'. அவர் ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் ரோமானியக் கடவுள்களின் பெயர்களே அதிகமாக வைத்தார்.

ஜனவரி : ரோமானியர்களின் மிக முக்கியமான கடவுளின் பெயர் ' ஜன்ஸ் '. எனவே, ஆண்டின் முதல் மாதத்திற்கு ஜனவரி எனப்பெயர் வைத்தார்.

பிப்ரவரி : ரோமானியர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்த தவறுகளை நீக்க கொண்டாடும் பண்டிகை 'ப்ருவா' இவ்வகையில் பிப்ரவரி மாதம் தோன்றியது.

மார்ச் : ரோதானியர்களை போர்களில் வெற்றி பெறுவதற்காக 'மார்ஸ்' என்ற கடவுளை வணங்குவார்கள். அது மார்ச் மாதமாயிற்று.

ஏப்ரல் : ரோமானியர்கள் விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் காலத்தில் 'ஏபிரோ' என்ற தெய்வத்தை வழிப்படுவார்கள். எனவே, அந்த மாதம் 'ஏப்ரல்' என்றாயிற்று.

மே : உலகத்தை மேம்படுத்தும் ரோமானியத் தேவதையின் பெயர் 'மேயா'. அதனால் ஏற்பட்டது 'மே' மாதம்.

ஜுன் : ரோமானியர்களின் சொரக்கத்தின் கடவுள் 'ஜோனா' அது ஜுன் மாதம்.

ஜுலை : ஜுலியஸ் வருஷத்தில் ஏழமவது மாதம் பிறந்தார். அவர் அதற்கு 'ஜுலை' எனப்பெயர் வைத்தார்.

ஆகஸ்டு : ரோமானியர் சாம்ராஜ்யத்தை நிறுவியவன் ' அகஸ்டஸ்'. அவன் நினைவாகப் பிறந்தது ஆகஸ்டு மாதம்.

பிறகு வந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், மாதங்களுக்குப் பெயர்கள் வந்ததற்கான ஆதாரங்கள் இல்லை.

டைனோசர் ஆணா? பெண்ணா?

பிரமாண்டமான டைனோசரை தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் பார்த்து நாம் பயந்து போயிருக்கிறோம். அருங்காட்சி யகத்திலே அதன் மாதிரி வடிவத்தைப் பார்த்து வியந்து போயிருக்கிறோம். ஆனால் இந்த டைனோசர் ஆணா? பெண்ணா? என்று உங்களுக்கு தெரியுமா?

டைனோசர் ஒரு பெண்தான் என்று அடித்துச் சொல்கின்றனர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். இதற்கு ஆதாரமாக இருப்பது அவர்கள் நடத்திய எலும்புத் திசு ஆராய்ச்சி. 6 கோடியே 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டைராசோசரஸ் ரெக்ஸ் என்ற டைனோசர் புதைவடிவத்தின் எலும்புத் திசுவை உயிருள்ள பறவைகளின் எலும்புத் திசுக்களுடன் ஒப்பிட்டு அமெரிக்காவின் வடக்கு கரோலினா அரசுப் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் மேரி ஷ்வைட்ஸர் தலைமையிலான குழு ஆராய்ச்சி நடத்தியது. டி ரெக்ஸ் என்ற அந்த டைனோசர் ஒரு பெண் தான் என்றும் அது இறந்த போது முட்டையிடும் பருவத்தில் இருந்தது என்பதும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

டி ரெக்ஸ் டைனோசர் புதைவடிவத்தின் உடைந்த கால் எலும்பில் வழக்கத்திற்கு மாறான எலும்புத் திசு லைனிங் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இப்படைப்பட்ட திசு இருப்பது டைனோசர் ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பதற்கு உதவியாக இருக்கின்றது. அது மட்டுமல்ல வெகு காலத்திற்கு முன்பே அழிந்து விட்ட பிரமாண்டமான டைனோசர்களுக்கு தற்போதைய பிரமாண்டமான பறவைகளான நெருப்புக்கோழி மர்றும் எமுள் எனப்படும் ஆஸ்ட்ரேலியப் பறவைக்கும் இடையே உள்ள தொடர்பை நிலைநாட்டவும் இந்த எலும்புத் திசு உதவியாக உள்ளது. டி ரெக்ஸ் டைனோசரின் எலும்பில் காணப்படும் வழக்கத்திற்கு மாறான திசு ஒரு மஜ்ஜை எலும்பாகும். இது இன்றைய பறவைகளில் ஒரு மெல்லிய நாள எலும்பாக உள்ளது.


இந்த எலும்புத் திசு இனப் பெருக்கத்துடன் தொடர்புடையது. உள்ளீடற்ற கால் எலும்பில் காணப்படும் இந்தத் திசு கடைசி முட்டை போடப்படும் வரை இருந்து விட்டு அப்புறம் மறைந்து விடுகின்றது. இந்தத் திருவை பறவையின் உடம்பு கிரகித்துக் கொள்கின்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தத் தற்காலிகத் திசு ஈஸ்ட்ரோகன் அளவு கூடுவதால் உருவாகிறது. மேலும் முட்டையின் தோடு உருவெடுப்பதற்குத் தேவையான கால்சியம் சத்தை வழங்குகின்றது. இத்தகைய நாள எலும்பு தற்கால பெண் பறவைகளிடம் தான் காணப்படுகின்றது. டைனோசர்க்கு நெருங்கிய சொந்தக் காரரான முதலையிடம் கூட இந்தத் திசு இயல்பாக வளர்ச்சியடைகின்றது. கோழி கவுதாரி போன்ற பறவைகளின் நாள எலும்புக்கும் டைனோசர் நாள எலும்புக்கும் ஒப்பிட முடியவில்லை. ஆகவே நெருப்புக் கோழி எமுஸ் போன்ற பறக்காத பறவைகளின் கால் எலும்புடன் ஒப்பிட்டு ஆராய்ந்தனர். அதில் இந்த ஒற்றுமை தெரிந்து டைனொசர் ஒரு பெண் தான் என்று விஞ்ஞானிகள் முடிவுகட்டினர்.

3000 டைனோசர் பாதச்சுவடுகள் சீனாவில் கண்டுபிடிப்பு

3000 டைனோசர் பாதச்சுவடுகள் சீனாவில் கண்டுபிடிப்பு
எண்ணிக்கையிலும் உருவ அளவிலும் பெரிய இனமாகக் கருதப்பட்ட சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்களின் 3000க்கும் அதிகமான பாதச்சுவடுகள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2600 சதுர மீட்டர் அளவில் உள்ள பாதச்சுவடுகள் ஜூசிங் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதச்சுவடுகள் 3 அடுக்குகளை கொண்டதாகவும் சீன தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 10 செ.மீ முதல் 80 செ.மீ. நீளமுடைய இந்த பாதச்சுவடுகள் 6 க்கும் அதிகமான வகையைச் சேர்ந்த டைனோசர்களுடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற புதைப்படிவங்கள் இந்நகரின் 30 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Template by : kendhin x-template.blogspot.com