Monday, December 20, 2010

தமிழ்

தமிழ்ச் சமூக வரலாற்றையும், இந்திய சமூக வரலாற்றையும் வரலாற்றறிஞர்களும், வரலாற்றாய்வாளர் எனக்கூறிக் கொள்வோரும் தங்கள் சொந்த விருப்பத்திற்கேற்ப மனம் போன போக்கில் புனைந்து வருகின்றனர். தொல்பொருள் தடயங்களுக்கு, தொல்லியல் அறிஞர்கள் கூறும் விளக்கங்களை இவர்கள் முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு அமைந்த தொல்லியல் அறிஞர்களின் விளக்கங்களை மட்டுமே, பெரும்பாலும் இவ்வரலாற்றறிஞர்கள் கணக்கில் கொள்கின்றனர். இத்தகைய போக்கினை தமிழக (தென் இந்திய) வரலாற்றாய்வாளர்களிடையே அதிக அளவில் காணமுடிகின்றது. இதன் விளைவாக, பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்ச் சமூக வரலாறு பல புதிர்களை உள்ளடக்கியதாக உள்ளது. தொல்லியல் தடயங்கள் கூறும் செய்திகளை முமுமையாகக் கணக்கிலெடுத்துக்கொண்டு விருப்பு, வெறுப்பற்ற நிலையில் தமிழ்ச் சமூக வரலாற்றை எழுத முயற்சிப்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கமாகும். பண்பாட்டு மானுடவியலில் முற்றிலும் புதிய கோட்பாடு ஒன்று இங்கு முன்வைக்கப்பட உள்ளது. எனவே சற்று விரிவாக எழுதவேண்டிய தேவையைக் கருதி இதனை ஒரு தொடராக எழுதுகிறேன்.

1.1. தமிழ்மொழி தோன்றியபொழுதே செம்மொழியான விந்தை:

கி.மு.300-கி.பி.200 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சங்ககால பாடல்கள், இலக்கிய, இலக்கண வளம் நிறைந்ததாக காணப்படுகின்றன. இக்காலக் கட்டத்தில் தமிழ் எழுத்திற்கும், சொல்லிற்கும் மிகத்தெளிவான இலக்கணம் வகுக்கப்பட்டுவிட்டதை தொல்காப்பியம் மூலம் அறியமுடிகின்றது. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சமகாலத்தில் உலகில் பேசப்பட்ட அனைத்து செம்மொழிகளுக்கும் நிகராக தமிழ்மொழி விளங்கியது என்பதை அறுதியிட்டு கூறமுடியும்.

மனிதகுல வரலாற்றில் உலோகப் பயன்பாடு தோன்றி அரசு நிலை கொண்ட பின்னரே மொழியைச் செம்மைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உலகில் முதன்முதலில் மருதநில வாழ்க்கைத் தோன்றிய சுமேரியாவில், ஊருக் நகரில் கி.மு.3400 வாக்கில் ஏறத்தாழ 700 குறியீடுகளைக் கொண்டிருந்த எழுத்துமுறை புழக்கத்தில் இருந்ததை அறியமுடிகின்றது. இக்காலக் கட்டத்தில், சுமேரியாவிலும் அதன் அண்டைப் பகுதிகளிலும் நிலையான பல நகர அரசுகள் வாழ்ந்தன. அந்நகர மாந்தர் செம்பு பயன்பாட்டுடன் கூடிய நீர்ப்பாசன, விவசாய வாழ்வை மேற்கொண்டிருந்தனர். கி.மு.2900ல் அதே சுமேரிய பகுதியில் நில பிரபுத்துவ அரசுகள் பல தோன்றிய நிலையில், கூனிபார்ம் (ஆப்பு எழுத்து) என அழைக்கப்பட்ட எழுத்துமுறை தோன்றியது. அக்காலக் கட்டத்தின் மேற்காசியாவில் பல்வேறு அரசுகளில் வாழ்ந்த, பல்வேறு மொழி பேசிய மக்களும் 'கூனிபார்ம்' எழுத்து முறையையே பயன்படுத்தினர். இவ்வெழுத்து முறையின் அடுத்தக் கட்ட வளர்ச்சியான நவீன காலத்தில் நாம் பயன்படுத்தும் நெடுக்கணக்கு (alphabet) எழுத்துமுறை, பாலஸ்தீனப் பகுதியில் அமைந்திருந்த கானன் தேசத்தில் கி.மு. / 600 வாக்கில் தோன்றியது. மொழி வளர்ச்சியில் பூர்வ குடிகளாகக் கருப்பர்கள் வாழ்ந்த மேற்காசியா இத்தகையை நீண்ட நெடிய வரலாற்றினைக் கொண்டிருந்த போதும் இக்காலக்கட்டத்தில் அங்கு பேசப்பட்ட மொழிகள் எதுவும் செம்மொழிகளாகப் பரிணமித்து விடவில்லை. அதன்பின் இப்பண்டைய மேற்காசிய (சுமேரிய) பண்பட்ட குடிகளுடன் உறவுகொண்டு அப்பண்பாடுகளைத் தமதாகச் சுவீகரித்துக்கொண்ட, வெள்ளையினக் குடிகளின் மொழிகளான ஹீப்ரூ, கிரேக்கம், லத்தீன், அரேபியம் போன்ற மொழிகள் மிகவும் பிற்காலத்தில் செம்மொழிகளாகப் பரிணமிக்கும் வாய்ப்பைப் பெற்றன.

சமஸ்கிருதம் சார்ந்த மக்கள் இந்தியாவிற்குள் குடியேறும் முன் ஈரான் (பண்டைய எல்லாமைட்) பகுதியில் பல நூற்றாண்டுகள் வாழ நேர்ந்ததால், அம்மொழியும் மேற்காசிய மொழி வல்லுநர்களின் துணையுடன் செம்மொழியாகப் பரிணமித்துவிட்டது. மேற்காசியாவுடன் நேரடித் தொடர்பில்லாத சீன மக்கள், ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகள் நிலையான அரசுகளுடன் கூடிய மருதநில வாழ்க்கையை மேற்கொண்ட பின்பே சீன மொழி செம்மொழியாகப் பரிணமித்தது.

இச்செம்மொழிகளுக்கெல்லாம் விதிவிலக்காக தமிழ்மொழி உள்ளது. தொன்றுதொட்டு தமிழகத்திலேயே வாழ்ந்து வந்த பூர்வகுடி மக்களாலேயே சங்க காலத் தமிழ்ச் சமூகம் தோற்றுவிக்கப்பட்டதாகத் தமிழக வரலாற்றாய்வாளர்கள் நம்புகின்றனர். ஆனால், தமிழகத்தில் வாழ்ந்த பூர்வகுடி மக்களோ, கி.மு.800க்கு முன் உலோகப் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை. தென்தமிழ்நாட்டில் வாழ்ந்த பூர்வகுடிமக்கள் கி.மு.4000லிருந்து சிறுகற்காலப் பண்பாட்டு மட்டத்திலும், பிற பகுதிகளில் வாழ்ந்த பூர்வகுடி மக்கள் கி.மு.1800லிருந்து புதிய கற்காலப் பண்பாட்டு மட்டத்திலும் வாழ்ந்து வந்ததைத் தொல்பொருள் தடயங்கள் மூலம் அறியமுடிகின்றது. இவ்விரு பண்பாட்டுக் குடிகளும் மிக எளிமையான பொருளியல் வாழ்க்கையையே மேற்கொண்டிருந்தனர். மொழி வளர்ச்சிக்கான எந்தவிதமானத் தடயங்களையும் இப்பண்பாடுகளில் காண முடியவில்லை. இத்தகைய எளிய மேய்ச்சல் வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மக்களிடம் மொழி வளர்ச்சி தோன்றியிருக்கக்கூடும் என எதிர்ப்பார்ப்பது அறிவியலுக்கு முற்றிலும் புறம்பானதாகும். அறிவுப்பூர்வமாகச் சிந்தித்தால், கி.மு.800க்கு முன் தமிழகம் முழுவதும் வாழ்ந்த பூர்வகுடி மக்கள் பல்வேறு மொழிகளையே பேசினர் எனத் துணிந்து கூறலாம்.

தமிழகத்தில், கி.மு. 800-கி.மு.500 வாக்கில் சேர நாட்டிலும் (இன்றைய கேரளா), தென்பாண்டி நாட்டிலும் இரும்பு பயன்பாடு தோன்றியதைத் தொல்லியல் தடயங்கள் மூலம் அறிய முடிகின்றது. இவ்வுலோகப் பயன்பாடு கி.மு.300 வாக்கில் தமிழகம் முழுவதும் பரவி, மருத நில வாழ்க்கையின் அடிப்படையில் அமைந்த அரசுருவாக்கத்திற்கு அடிகோலியது. இச்சூழல் தமிழகம் முழுவதும் வாழ்ந்து வந்த பூர்வகுடி, பழங்குடி மக்கள் ஒரே மொழியைப் பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். மருத நில நாகரிகம் தோன்றிய சில நூற்றாண்டுகளுக்குள் இலக்கிய மொழியாகப் பரிணமித்துவிட்ட தமிழ், மிகவும் எளிமையான கொடுமொழியாகவே இருந்திருக்க முடியும். மாறாக, சமகாலத்திய செம்மொழிகள் அனைத்தையும்விட ஒரு படி மேலாகவே தமிழ்மொழி செவ்வியல் தன்மையை அடைந்திருந்ததைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. மிக நீண்ட கால மருதநில வாழ்க்கையை மேற்கொண்டு மொழி வளர்ச்சியைப் படிப்படியாகத் தோற்றுவித்திருந்த மக்களின் மொழிகளான சுமேரியன், எல்லாமைட் போன்ற மொழிகள்கூட செவ்வியல் தன்மையை அடைந்திருக்கவில்லை. ஆனால், திடீரென நாகரிக மக்களாக மாறிய தமிழரின் மொழி சிறப்பான செவ்வியல் தன்மையுடன் விளங்கியது மிகப்பெரும் புதிரேயாகும்.

மொழியியலில் மட்டுமல்லாமல், சங்க காலத் தமிழர் தொழில்நுட்பம், வணிகம், போக்குவரத்து, விவசாயம், போர்முறை, அறநெறி போன்ற பல்வேறு துறைகளிலும் சமகாலத்திய வளர்ந்த சமூகங்களுக்கு இணையாக வளர்ந்திருந்ததைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகின்றது.

இப்புதிரை விடுவிக்கும் வகையில் தமிழக வரலாற்றாய்வாளர்களிடையே இருவகையான கருதுகோள்கள் நிலவுகின்றன.

1.2 ஆரிய மாயை (அல்லது) ஐரோப்பிய மாயை

தமிழ் மொழி தோன்றியபொழுதே செம்மொழியான புதிரை விடுவிக்கும் வகையில் 'ஆரியமயமாதல்' என்ற கருதுகோள் முன்வைக்கப்படுகின்றது. தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் வட இந்தியாவிலிருந்து குடியேறிய ஆரியராகிய பிராமணரால் வளர்த்தெடுக்கப்பட்டவை என்பது இக்கருதுகோளின் சாராம்சமாகும். இக்கருதுகோள், பிறப்பிலேயே தமிழ்மொழி செம்மொழியான புதிரை எளிதில் நீக்கிவிடுகின்றது. இக்கோட்பாட்டை எதிர்ப்போர் இதனை 'ஆரிய மாயை' எனவும் கூறுவர்.

கி.மு.600 வாக்கில் வடஇந்தியாவிலிருந்து தமிழகத்திற்குள் குடியேறிய ஆரிய பிராமணர்கள் தமிழ் அரசர்களைக் கத்தியின்றி, இரத்தமின்றித் தங்களின் பண்பாட்டு மேலாண்மையினால் வென்றனர் என்பது இவர்களின் கருத்தாகும். இதற்கு ஆதரவாக புராணங்கள் கூறும் அகத்தியனின் தென்னகக் குடியேற்றம் தொடர்பான கதைகளைப் பயன்படுத்திக் கொண்டனர். வட இந்திய மார்க்ஸிய வரலாற்றறிஞர் டி.டி.கோசாம்பியின் கீழ்க்கண்ட குறிப்புகள் ஆரிய மாயையின் கருத்தோட்டத்தைப் புரிந்து கொள்ள உதவும்.

" வரலாற்றைத் தொழிலாகக் கொண்டவர்களுக்குத் தெற்கிலுள்ள இராஜவம்சப் பட்டியல் இன்பமான பொழுதுபோக்கு. இக்ஷ்வாகு, பல்லவர், பாணர், கடம்பர், சேதியர், கலச்சூரி, சாளுக்கியர், சோழர், பாண்டியர், சேரர் மற்றும் வேறு பல மன்னர்கள் கொண்ட பட்டியல் கவர்ச்சியாக இருந்தாலும் பொதுவாக அர்த்தமற்றது. இடைக்கால இந்திய வரலாற்றைப் பற்றிய புத்தகங்களில் இந்த விவரங்களைப் படித்துக்கொள்ளலாம். ஆனால் இப்புத்தகங்கள், பொதுவாக இம்மன்னர்களால் பரிமாறிக் கொள்ளப்பட்ட ஒருமைப்பாட்டு விஷயங்களைச் சுட்டிக்காட்டத் தவறிவிட்டன. உயர்ந்த பிராமணப் பண்பாடு, பழங்குடி மக்கள் மீது திணிக்கப்பட்டது, அல்லது அவர்களால் சுவீகரித்துக்கொள்ளப்பட்டது. அதே சமயத்தில் பரிமாற்ற உணர்வின் அடிப்படையில், பிராமணர்கள் பூர்வகாலப் பழங்குடி மரபுக் கூறுகளை ஏற்றுக்கொண்டனர்". (டி.டி.கோசாம்பி: பண்டைய இந்தியா - அதன் பண்பாடும் நாகரீகமும் பற்றிய வரலாறு, முதற்பதிப்பு பிப் - 1989; பக் 349.)

சங்ககால வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்க்குடிகளை, கோசாம்பி போன்ற ஆய்வாளர்கள் பழங்குடிகளாக்கி மகிழ்வது தொல்லியல் தடயங்களுக்குப் பெரிதும் முரண்படவில்லைதான். எனினும் தமிழ்வேந்தர் குடியினர் உள்ளிட்ட தென்னக அரசர்களின் வம்சப் பட்டியலைக் கேலிக்குள்ளாக்கிப் பேசுவது ஏற்புடையதாகத் தோன்றவில்லை. தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாட்டுடன் கூடிய மருத நில வாழ்க்கை கி.மு.500லேயே தோன்றியிருந்ததற்கானத் தொல்லியல் தடயங்கள் நூற்றுக்கணக்கான இடங்களில் 75 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருந்த நிலையில், பண்டைய தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய கோசாம்பியின் கருத்து மிகப்பெரிய கேலித்கூத்தாகும்.

"புராதன இந்திய சரித்திர அறிமுகம்" என்ற நூலில் மோரியர் பற்றிய தமிழ் இலக்கியச் சான்றுகள் குறித்த தனது கருத்தைக் கோசாம்பி வெளியிட்டுள்ளார்.

"மோரியர் காலத்தில் தமிழ் இலக்கியம் வளர்ச்சியடைந்திருந்தது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. மோரியர் காலத்தில் தமிழ்நாட்டில் புதிய கற்கால நாகரிகம் நிலவியிருந்தது. எழுத்தும் இலக்கியமும் தோன்றவில்லை. இக்கருத்தை நான் மாற்றிக்கொள்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை." - என மேற்கண்ட நூலில் கோசாம்பி குறிப்பிடுகின்றார்.

மோரியர் காலமாகிய கி.மு.300ல், தமிழ்நாட்டில் புதியகற்கால நாகரிகமே நிலவியது எனக்கூறும் கோசாம்பியின் கீழ்கண்ட குறிப்புகள் அவரது உள்ளக்கிடக்கையை மேலும் தெளிவாக்குகின்றது. "மொழி விவசாயம் ஆகியவற்றின் வளர்ச்சிக்குரிய ஊக்கம் வடக்கிலிருந்து பெரிய அளவுக்கு கி.மு.6ஆம் நூற்றாண்டில் தெற்கே வந்தடைந்தன." (டி.டி.கோசாம்பி: பண்டைய இந்தியா, அதன் பண்பாடும் நாககீகமும் பற்றிய வரலாறு, பக் - 202)

"விந்திய மலைக்குத் தெற்கே ஊடுருவிய ஆரியக் குடியேற்றத்திற்கும், அகத்திய கோத்திரத்திற்கும் சில தொடர்புகள் உண்டு. தெற்கிலுள்ள பெருங்கற்காலத்துடன் அத்தொடர்புகளை உறுதி செய்யலாமென்ற ஆர்வம் எழுந்தாலும் அதன் அடிப்படை இன்றளவும் தெய்வீகக் கற்பனை வடிவிலேயே உள்ளன." (டி,டி.கோசாம்பி: பண்டைய இந்தியா, அதன் பண்பாடும் நாகரீகமும் பற்றிய வரலாறு, பக் - 164)

கி.மு.600ல் வடக்கிலிருந்து தமிழகத்திற்குள் குடியேறிய ஆரியப் பார்ப்பனர், பழங்குடிகளாக வாழ்ந்த தமிழ்ச் சமூகத்திற்கு மொழியையும், விவசாயத்தையும் கற்றுக்கொடுத்தனர் என்பது கோசாம்பியின் கருதுகோளாகும். மோரியர் காலமாகிய கி.மு.300 வரை தமிழகத்தில் புதியகற்கால நாகரிகமே நிலவியது என்றும், இக்கருத்தைத் தான் மாற்றிக் கொள்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கோசாம்பி அடித்துக் கூறுகின்றார். எனவே கி.மு.600லேயே தமிழகத்திற்குள் குடியேறிவிட்டதாக் கருதப்படும் ஆரிய ரிஷி கோத்திரத்தினரும், புதியகற்காலப் பண்பாட்டு மட்டத்திலேயே தமிழகத்திற்குள் குடியேறினர் என்றுதான் கோசாம்பி கருதியிருக்க வேண்டும்.

புதியகற்காலப் பண்பாட்டு மட்டத்தில் வாழ்ந்த கருப்பரிடம் மொழியும் பண்பாடும் வளர்ந்திருக்கவில்லை என்றும், அதே பண்பாட்டு மட்டத்தில் தமிழகத்திற்குள் குடியேறிய ஆரிய கோத்திரத்தினர் வளர்ந்த பிராமணப் பண்பாட்டைக் கொண்டிருந்தனர் என்றும் மனம் போன போக்கில் டி.டி.கோசாம்பி போன்ற சிறந்த வரலாற்றறிஞர் எழுதுவது வியப்பாக உள்ளது. அகத்தியனின் குடியேற்றத்துடன் டி.டி.கோசாம்பியால் சரியாகவே தொடர்புபடுத்தப்படும் பெருங்கற்கல்லறை பண்பாடு நன்கு வளர்ந்த நிலையிலிருந்த இருப்புப் பயன்பாட்டு மருதநில விவசாயப் பண்டபாடாகும். கி.மு.600ல் தமிழகத்திற்குள் குடியேறிய ஆரிய கோத்திரத்தினர் இரும்பு பயன்பாட்டுடன் கூடிய மருத நில விவசாய நாகரிகத்தைத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுடைய வளர்ச்சியடையாத கொடுமொழியைச் செம்மைப்படுத்திச்'செந்தமிழை'த் தோற்றுவித்தனர் என்று கூறினால்கூட ஏற்புடையதாக இருக்கும்.

அவ்வாறு கூறினால், கி.மு.600லேயே செம்மைப்படுத்தப்பட்டுவிட்டத் தமிழ் மொழியில் மோரியர் காலமாகிய கி.மு.300ல் (சங்க காலம்) இலக்கியங்கள் தோன்றியிருக்க வாய்ப்பு உண்டாகி, தமிழக அரசவம்ச பட்டியலுக்கும் அர்த்தமுண்டாகிடும் என்பதால் முன்னுக்குப்பின் முரணாக கோசாம்பியார் குறிப்பிடுகின்றார் போலும். ஆரிய ஆர்வலர்கள் கருதுவது போல், வட இந்தியாவிலிருந்து தர்ப்பைப் புல்லை ஆயுதமாகக் கொண்ட பிராமணர் (அகத்திய கோத்திரத்தினர்) ஒருபோதும் தனிக்கூட்டமாக தென்னகத்தில் குடியேறிவிடவில்லை. தமிழக வேந்தர் வேளிர் குடியுடன் கூடவே பிராமணர்களின் தென்னகக் குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழக அரசகுலத்தவரின் பூர்வீகம், வடஇந்தியா என்பதற்குப் புறநானூற்றுப் பாடல் ஒன்று சான்று பகர்கின்றது.

"நீயே வடபால் முனிவன் தடவினுட் தோன்றி
செம்பு புனைந்தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற் போரண்ணல்" (புறம் : 201)

இப்புறநானூற்றுப் பாடலில், தமிழக வேளிர் குடியினர் சங்ககாலத்திற்கு 49 தலைமுறைக்கு முன் வட இந்தியாவிலுள்ள துவாரகையை ஆண்ட அரசகுலத்தவரின் வழிவந்தவர்கள் என்ற செய்தி பதிவாகியுள்ளது.

கி.மு.600லிருந்து தமிழகம் முழுவதும் கிடைக்கக்கூடிய பெருங்கற்கல்லறைப் பண்பாடு குஜராத் பகுதியிலிருந்து தமிழகத்திற்குள் பரவியிருக்கலாம் என்ற தொல்லியல் அறிஞர்களின் கருத்தும் புறநானூற்றுப் பாடலின் செய்திக்கு உயிரூட்டுவதாக உள்ளது. தொல்லியல் அறிஞர் எஸ்.இராமச்சந்திரன், "சங்க கால உற்பத்திக் கருவிகள்" என்ற கட்டுரையில், தமிழகப் பெருங்கற்கல்லறைகளில் கிடைக்கக்கூடிய தொல்பொருட்கள் பெரும்பாலும், இரும்பினால் தயாரிக்கப்பட்ட போர் ஆயுதங்களாகவே உள்ளன எனக் குறிப்பிடுகின்றார். இச்செய்தியிலிருந்து, தமிழக பெருங்கற்கல்லறைப் பண்பாட்டினை போர்குடிகளான தமிழக அரசர் குடியினரின் குடியேற்றத்துடன் தொடர்புப்படுத்த முடிகின்றதேயன்றி, டி.டி.கோசாம்பி கருதுவதுபோல் அகத்திய (பிராமண) கோத்திரத்தவரின் குடியேற்றத்துடன் தொடர்புபடுத்த முடியவில்லை. அவ்வாறாயின் தமிழகத்தில் வழங்கப்படும் அகத்தியன் தொடர்பான கதைகளுக்குப் பொருள் ஏதும் இல்லை எனக் கூறலாமா? இச்சிக்கலுக்கு நக்கினார்க்கினியரின் உரை ஒன்று தீர்வு நல்கின்றது.

"துவராபதி போந்து நிலங்கடந்த
நெடுமுடியண்ணல் வழிக் கண்ணரசர்
பதினெண்மாயும், பதினெண்குடி
வேளிருள்ளிட் டாரையு மருவா
ளரையுங் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கி". (தொல்: எழுத்ததிகாரம்: பாயிரம்: நச்சினார்க்கினியர் உரை)

இதன் பொருளாவது, சிவபெருமானின் விருப்பத்திற்கிணங்க தென்திசை நோக்கிப் பயணித்த அகத்தியன், வழியில் துவாரகை சென்று, மாவலியிடமிருந்து பூமியை அபகரிக்க, நிலம் அளந்த நெடுமுடியண்ணலாகிய திருமாலின் வழி வந்த வேந்தர் குடியினரையும், பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும், அருவாளரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, தமிழகம் குடியேறிப் பின் அவர்களின் உதவியுடன் காடு கெடுத்து நாடாக்கினான் என்பதாகும். அதாவது அகத்திய முனிவரின் தலைமையிலேயே தமிழக அரசகுலத்தவர் வட இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்துள்ளதாக நச்சினார்க்கினியர் உரைக்கின்றார். வடக்கிலிருந்து குடியேறிய பிராமண கோத்திரத்தினர் கத்தியின்றி, இரத்தமின்றி தங்கள் பண்பாட்டு மேலாண்மையினாலேயே தமிழகப் பூர்வகுடி மக்களை வென்றெடுத்தனர் என்ற ஆரிய ஆர்வலர்களின் கருதுகோள், பேனைப் பெருமாளாக்கிக் காட்டும் வித்தையே ஆகும். சிறந்த போர்க் குடிகளான தமிழக வேந்தர் குடியினர் தங்களுடன் குடிபெயர்ந்த வேளிர் மற்றும் அருவாளர் ஆகிய போர்க் குடிகளின் துணை கொண்டு, தமிழகத்தில் ஏற்கனவே வாழ்ந்து வந்த பழங்குடி மக்களைத் தங்களின் வாளின் வலிமையால் வணக்கியதையே சங்க இலக்கியக் குறிப்புகளும், தொல்லியல் தடயங்களும் நிறுவுவதாக உள்ளன. இப்போர்க் குடிகளுக்குக் குரு நிலையில் தலைமையேற்று வழி நடத்தியவர் அகத்திய கோத்திரத்தினர் ஆவர். எனவே, தமிழக அரசர் குடியினரையும் பிராமண கோத்திரத்தினரையும் தனித்தனிக் கூட்டங்களாகப் பிரித்துப் பார்ப்பதற்குத் தமிழகச் சூழலில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதை உணரவேண்டும்.

எனவே, பிராமணமயமாதல் அல்லது ஆரியமயமாதல் என்ற ஆரிய ஆர்வலர்களின் கருகோள் அவர்களது சொந்த விருப்பத்திற்கேற்ப, பல ஆதாரங்களைத் திரித்துக் கூறியும், திரிக்கமுடியாத ஆதாரங்களை மறைத்தும் கட்டப்பட்ட ஒரு மாயையாகும். மனித இனங்களில் ஐரோப்பிய இனங்களே உயர்ந்தவை, ஐரோப்பிய இனங்களில் ஆரிய இனமே உயர்ந்தது. ஆரியரில் பிராமணரே உயர்ந்தவர் என்ற கருத்துதான் ஆரிய மாயையின் சாராம்சமாகும்.

டி.டி. கோசாம்பி கருதுவது போல், மொழி வளர்ச்சியில் சிறிதும் முன்னேற்றம் பெற்றிராதப் புதியகற்காலப் பண்பாட்டுக் குடிகள் வாழ்ந்த தமிழகத்தில், ஆரியமயமாதல் நடைபெற்றிருக்குமேயானால் தமிழ் மொழி, அரசியல் மற்றும் சமூகவியல் தொடர்பான பல சொற்களைச் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய சொற்கள் தமிழுக்கே உரியனவாக நாடு, கூற்றம், ஊர், சீறூர், பாடி, பட்டணம், பாக்கம், குறும்பு, வேந்தன், நாடன், ஊரன், மகிழ்னன், வேளிர், வெற்பன், சிலம்பன், சேர்ப்பன், புலம்பன், கிழவன், சான்றோன், ஏனாதி, எட்டி, சீறூர் மன்னன், பெருமகன், பெருங்குடி, சிறுகுடி, நாள்மகிழ் இருக்கை, சான்றோர் அவையம், ஐம்பெருங்குழு, என்பேராயம், நெடுமுடி, குறுமுடி, செங்கோல், அரசுகட்டில், அரியணை, வெண்கொற்றக்குடை, கொடி, முத்திரை, முரசு, கடிமரம், தேர், கஞ்சுகமாக்கள், தூதர், ஒற்றர், திருமுகக்கணக்கு, உழைச்சுற்றாளர், அகவர், படைச்சிறுக்கன், கட்டியங்காரன், உழையர், பெருங்கணி என்று ஒரு பெரும் பட்டியலையே கொடுக்கலாம். சமயத் துறையிலும் தேவையான அளவிற்குத் தனித்தமிழ்ச் சொற்கள் நிறைந்து காணப்படுகின்றன. தமிழ் மொழி சமஸ்கிருதச் சொற்கள் சிலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளதைப் போல், சமஸ்கிருதமும் தமிழ்ச் சொற்கள் சிலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளதைக் காண முடிகின்றது. எனவே, சில சொல் பரிமாற்றகளைக் கொண்டு சமஸ்கிருதம் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்தியது என்றோ அல்லது தமிழ்மொழி சமஸ்கிருதம் மீத ஆதிக்கம் செலுத்தியது என்றோ கூறுவது அறிவுக்கு ஒவ்வாத ஒன்று.

ஆரிய மாயை, பண்டைய உலக வரலாற்றைத் தங்கள் விருப்பத்திற்கேற்பத் திரித்துச் சித்திரித்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய மாயையின் இந்திய வடிவமாகும். ஐரோப்பிய மாயையினரால் தோற்றுவிக்கப்பட்டக் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய சித்திரத்தைக் கொண்டு ஐரோப்பியரே உலகின் முதல் ஆணாதிக்க சமூகத்தினராகப் பரிணமித்தவர் எனப் பரவலாக நம்பப்பட்டு வருகிறது. இந்திய சமூகத்தில் இந்தோ ஆரியரே முதல் ஆண்வழிச் சமூகத்தவர் என ஆரிய ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். கி.மு. 4000 ஆண்டளவில் ஆரிய இன மக்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும் காகேசியப் பரப்பில், நால்சிக் என்ற இடத்திலுள்ள புதிய கற்காலக் கல்லறைகளில் ஆண்களை வலது புறமும் பெண்களை இடது புறமுமாகச் சாய்த்துப் புதைத்திருந்ததை இதற்குச் சான்றாகக் காட்டுகின்றனர். இது ஏற்கக்கூடியதுதான். ஆனால் சமகாலத்தில் மேற்காசியாவில் வாழ்ந்துவந்த கருப்பின மக்கள் வேட்டை நிலையில் தோன்றியிருந்த ஆண்வழிச் சமூக அமைப்பைக் கடந்து உலோகப் பயன்பாட்டையும், நீர்ப்பாசனத்துடன் கூடிய விவசாயத்தினையும் அறிந்து மிக வளர்ந்த பண்பாட்டு நிலையில் வாழ்ந்து வந்துள்ளனர். இது மட்டுமின்றி மேற்காசியாவிலிருந்து பரவிய பண்பாட்டின் மூலமே ஆரியர் உட்பட்ட ஐரோப்பியரிடம் புதிய கற்காலப் பண்பாடு தோன்றியது என்பதைத் தொல்லியல் தடயங்கள் தெளிவாக நிறுவுகின்றன.

மேற்காசியக் கருப்பின மக்கள் புதிய கற்கால நாகரிகத்தை ஐரோப்பாவிற்கு எடுத்துச் செல்லும் வரையிலும், ஆரியர் தாய் தலைமையிலான இரத்த உறவுக் குடும்ப அமைப்புக் கூட்டங்களாகவே வாழ்ந்துள்ளனர் எனத் தெரிகிறது. இதற்குக் கிரேக்கப் புராணங்கள் சான்றாக உள்ளன. கிரேக்க புராணங்கள்படி முதலில் சூனியத்திலிருந்து கேயா என்ற பூமித் தாயும் டார்டாரஸ் (Tartarus) என்ற பாதாள உலகக் கடவுளும் ஈராஸ் (Eros) என்ற காதல் தெய்வமும் தோன்றினர். பூமித்தாய் கேயா ஆண் துணையின்றி கன்னித் தாயாகி யுரேனஸ் (Uranus) என்ற ஆகாயக் கடவுளையும் அவுரியா என்ற மலை தெய்வத்தையும் பாண்டஸ் (Pontus) என்ற கடல் தெய்வதத்தையும் தோற்றுவித்தாள். பின் யுரேனஸைக் கணவனாக்கிக் கொண்ட கேயா, மூன்று ஒற்றைக் கண் அரக்கர்களையும் மூன்று 50 தலைகள் கொண்ட அரக்கர்களையும் பெற்றெடுத்தாள். பிள்ளைகளால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் எனக் கருதிய யுரேனஸ் அவர்களைப் பாதாள உலகிற்குள் தள்ளிவிடுகிறான். இச்செயல் கேயாவை வெறுப்படையச் செய்தது. இந்நிலையில் இவ்விருவருக்கும் டைட்டன் (Titan) என அழைக்கப்பட்ட அசுரர்கள் பிறந்தனர்.

கடைசி டைட்டனாகிய குரோனஸ் (Cronus) தனது தாயின் விருப்பப்படித் தந்தை யுரேனஸைக் கொன்றுக் கடவுளர்களின் தலைவனாகிறான். பின் குரோனஸ் தன் சகோதரி ரியா (Rhea)- வை மனைவியாக்கிக் கொள்கிறான். அதன் பின் குரோனசின் மகன் ஜீயஸ் (Zeus) தந்தையை வென்று மேலுலகத்தின் கடவுளாகிறான். ஜீயஸ் தனது சகோதரி ஹீரா (Hera)- வை மணந்து வேறோர் கடவுளின் மனைவியாகிவிட்ட மற்றோர் சகோதரி டெமடரைக் (Demeter) காதலிக்கிறான் என்பதாகச் சொல்கிறது கிரேக்கப் புராணம்.

கிரேக்கப் புராணப்படி கேயா தனது மகன் யுரேனஸைக் கணவனாக்கிக் கொள்கிறாள். மேலும் சகோதர, சகோதரிகளுக்குள் மணவுறவிருப்பது மிக இயல்பாகக் காட்டப்பட்டுள்ளது. தந்தை சொந்த மகன்களைப் போட்டியாளனாகக் கருதி பாதாள உலகிற்கு அனுப்பிவிடுவதும் பிள்ளைகள் தந்தையைக் கொன்று பதவியைக் கைப்பற்றுவதும் கூறப்படுகின்றன. பிள்ளைகளைப் போட்டியாளராகக் கருதுகிற கடவுளர்களையோ அல்லது தந்தையைக் கொன்றுப் பதவியை எடுத்துக் கொண்ட மகன்களையோ இந்துப் புராணங்களில் காணமுடியாது.

மேலும், சகோதர-சகோதரி மண உறவு இந்துப் புராணங்களுக்கு முற்றிலும் அன்னியமானது. மாறாக இந்துப் புராணங்கள் காட்டும் மணஉறவுகள் மாற்று சகோதர மண உறவை (Cross Cousin Marriage) அடிப்படையாகக் கொண்டுள்ளன. மாற்றுs சகோதர மண உறவு வட இந்திய ஆரிய சமூகத்திற்கும்கூட அன்னியமானதாகும். கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போதாயன தர்ம சூத்திரம் மாற்று சகோதர மண உறவு தென்னிந்தியருக்கே உரியது எனக் கூறுகிறது. இந்துப் புராண மரபுகள் திராவிடருக்கே, குறிப்பாகத் தமிழருக்கே பொருந்தி வருவதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆங்கில மொழி உறவுப் பெயர்களான பிரதர் - இன் - லா, சிஸ்டர் - இன் - லா, சன்- இன் - லா, டாட்டர் - இன் - லா போன்றவை இரத்த உறவுக் குடும்ப அமைப்பின் சாயலைக் கொண்டுள்ளன. ஐரோப்பியர், காட்டுமிராண்டி நிலையிலிருந்து மிகவும் பிற்காலத்திலேயே நாகரிகத்திற்குள் நுழைந்ததால்தான் இத்தகையப் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் நீடித்திருக்கின்றன. வேறு சில பண்பாட்டு எச்சங்களும்கூட இதற்கு வலு சேர்க்கின்றன.

பெண்களின் கற்புநெறி என்பது ஆண்களின் தனிவுடைமையைப் பாதுகாக்கக் கூடிய நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் மிக முக்கியக் கூறாகும். கி.மு. 1750-இல் பாபிலோனிய அரசன் ஹமுராபி வகுத்த சட்டங்கள் முதல் மனு ஸ்மிருதி வரையிலும் உலகின் நிலப்பிரபுத்துவ சமூகச் சட்டங்கள் அனைத்தும் பெண்களின் கற்பு நெறிக்கு மிக முக்கியமான இடத்தைக் கொடுத்துள்ளன. ஐரோப்பிய சமூகம், பெண்கள் கற்பு நெறியைப் பேணுவதற்காகக் கொடுமையான சட்டங்களைப் பழங்காலத்திலிருந்தே பெற்றிருந்த போதிலும்கூட கற்பு நெறியைக் கடைப்பிடித்துக் காக்க முடியாமல் தடுமாறுவதை நாம் காண்கிறோம். அங்கு நட்புள்ள எந்த ஒரு ஆணும், பெண்ணும் பொது இடத்தில் கட்டிப்பிடிப்பதும் முத்தமிடுவதும் இயல்பானதாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. விவாகரத்தும், மறுமணமும் வெகு இயல்பானதாக அங்கு உள்ளன. விழாக்களில் ஆணும், பெண்ணும் சேர்ந்து ஆடுவதும் பாடுவதும் வரைமுறையற்ற நிலையில் மேட்டுக்குடியினரிடமும் நடைபெறுகிறது. இவ்வாறு இருபாலரும் சேர்ந்து ஆடுவதைத் தமிழகக் கிராமப்புறங்களில்கூட நாம் காணமுடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சங்க கால உண்டாட்டுகளில்கூட இருபாலரும் சேர்ந்து வரைமுறையின்றி கூத்தாடும் வழக்கம் இருந்ததில்லை. ஐரோப்பியரின் இன்றைய நடனக்கலை பழங்குடி நிலை இனக்குழு நடனங்களின் ஒரு வளர்ந்த வடிவமாகவே தெரிகின்றது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப அமைப்பின் வளர்ந்த வடிவத்தைத் தமிழ்ச் சமூகம் சங்க காலத்திலிருந்து கொண்டுள்ளது. கற்புநெறி, தமிழ்ச் சமூகத்தின் மனதளவிலேயே பதிவாகியுள்ள அளவு வேறெந்த சமூகத்திலும் இல்லை. கி.மு. 1500லேயே பாபிலோனியா, அக்காடியன், அசிரியா, ஹிட்டைட், காசைட், மிட்டானி போன்ற நிலப்பிரபுத்துவ அரசுகளை மேற்காசியாவில் கருப்பின மக்களிடமிருந்து கைப்பற்றித் தமதாக்கிக் கொண்ட போதும்கூட ஐரோப்பியரிடம் தமிழர் அளவுக்கு கற்புநெறி மனதிலே பதிந்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கி.மு. 1500க்கும் முன்பே, மிக நீண்ட காலமாகத் தந்தை வழிச் சமூகமாகவும் அதனடிப்படையில் தோன்றிய தனிவுடைமைச் சமூகமாகவும் வாழ்ந்திருந்ததாலேயே பெண்களின் கற்புநெறி இவ்வளவு ஆழமாகத் தமிழ்ச் சமூகத்தில் வேரூன்றியுள்ளது எனக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

சங்க காலத் தமிழ் வேந்தர் குடியினரில் பாண்டியரும், சோழரும் இரண்டாயிரம் ஆண்டுகளாகச் சிறு பகுதியையேனும் ஆட்சி செய்து வந்ததற்குச் சான்றுகள் உள்ளன. சேரரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளனர். இந்நீண்ட கால வரலாற்றில் ஒரேயொரு பெண் அரசிகூட வேந்தர்கள் சார்பில் அரசுக் கட்டிலில் அமரவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் சமூகம், ஆண்வழிச் சமூக அமைப்பில் நீண்ட காலம் வாழ்ந்ததால் மட்டுமே இது சாத்தியமாயிற்று எனலாம்.

ஆரிய (ஐரோப்பிய) மாயையினர், அம்மாயையிலிருந்து விடுபட்டு விவாதிக்கப்படும் விஷயங்களைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே இவ்வளவு நீண்ட விளக்கம் மேலே தரப்பட்டுள்ளது. மேற்கண்ட பொருள் குறித்துப் பண்பாட்டு மானுடவியலாளர் பரிசீலனை செய்வாராயின் அது பயனுடையதாக அமையும்.

ஆரிய மாயைக்கு எதிராக வளர்த்தெடுக்கப்பட்ட மற்றுமொரு மாயை, தமிழ்ச் சமூக வரலாற்றை ஆட்டிப்படைத்து வருகின்றது. ஆரிய மாயையைவிட மிக மோசமான அளவில் தமிழ்க் குடிகளின் வரலாற்றைக் குழி தோண்டிப் புதைத்து வரும் இம்மாயையை அடுத்துக் காண்போம்.

கப்பலின் கதை

மலேசியாவில் உள்ள பலருக்கு மிகவும் பரிச்சயமான பெயர்கள்
சில உண்டு. அந்தப் பெயர்களில் சில கப்பல்களின் பெயர்களும்
அடங்கும்.
அவற்றில் மிகவும் புகழ் வாய்ந்த பெயர் - 'ரஜூலா'.
தமிழர்களால் மிகச் செல்லமாக 'ரசூலாக் கப்ப' என்று அழைக்கப்
பட்ட கப்பல்.
கடாரம், ஸ்ரீவிஜயம், இலங்காசோகம் போன்ற நாடுகள் மலாயாவில்
இருந்த காலத்திலேயே பாய்மரக் கப்பல்களில் தமிழர்கள் வரப்போக
இருந்திருக்கின்றனர்.

அவர்களுடைய கப்பல்கள் மிகவும் பெரியவை; சிறப்புமிக்கவை.
எண்ணிக்கையிலும் அதிகம் இருந்திருக்கின்றன. கம்போடியா, ஜாவா
ஆகிய இடங்களில் உள்ள புடைப்புச்சிற்பங்களில் இந்தக் கப்பல்களைக்
காணலாம். அவற்றின் படங்களைக் காணவேண்டின் அகத்திய
ஆவணத்தைக் கிளறிப் பார்க்கலாம்.

ஆகையால்தான் மலாய் மொழி, இந்தோனேசிய மொழி ஆகியவற்றில்
கப்பலை 'கெப்பால்' என்று குறிப்பிடுகிறார்கள். எப்போதுமே ஒரு தமிழ்ச்
சொல்லோ சம்ஸ்கிருதச்சொல்லோ மலாய் மொழிக்குள் செல்லும்போது
இரண்டாவது அட்சரம் நெடிலாக மாறும். மலர்- மெலோர்;
படகு - பெராஹ¤; முதல் - மோடால்; கடை - கெடாய்; சகல - செகால....
இப்படி......இப்படி.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இரும்பால் ஆன
நீராவிக்கப்பல்கள் வழக்கத்திற்கு வந்தன. அப்போதுதான்
'சஞ்சிக்கூலிகள்' என்ற பெயரில் லட்சக்கணக்கான தமிழர்கள்
மலாயாவுக்கும் சுமாத்ராவுக்கும் கொண்டுவரப்பட்டனர்.

ஆங்கிலேயெர்களின் ஆதரவில் லேவாதேவித் தொழில்
செய்வதற்காக செட்டிநாட்டிலிருந்து நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்
வந்தனர். அவர்களுடன் வேளாளர், யாதவர், கள்ளர், வல்லம்பர் போன்ற
குடியினரும் வந்தனர். தமிழகத்தின் கரையோரப் பட்டினங்களிலிருந்து
தமிழ் முஸ்லிம்கள் வந்தனர். இவர்கள் வர்த்தகங்களைச் செய்துவந்தனர்.
யாழ்ப்பாணம், கேரளம், ஆந்திரம் ஆகிய இடங்களிலிருந்தும் குறைவான
எண்ணிக்கைகளில் வந்தனர். சீக்கியர்கள் போலீஸ், பட்டாளம், காவல்,
பால்வியாபாரம் போன்ற துறைகளில் ஈடுபட்டார்கள்.

தமிழர்களில் பெரும்பான்மையினர் கூலிவேலைகளில் ஈடுபடுத்தப்
பட்டனர்.
இந்தப் போக்குவரத்துக்காக சில கப்பல்கள் விடப்பட்டன.
அவற்றில் பல கப்பல்கள் பெயர் தெரியாமலேயே போய்விட்டன.
மனதில் நிற்கக்கூடியவை ரோணா, அரோண்டா, ரஜூலா,
ஜலகோபால், ஜல உஷா, ஸ்டேட் ஆ·ப் மெட்ராஸ், எம்.வி.சிதம்பரம்
ஆகியவை.
இவற்றில் ரோணாவும் அரோண்டாவும் மூழ்கிவிட்டன.
முதலில் ரோணாவும் ரஜூலாவும் இணைந்து ஓடின.
பின்னர் ரஜூலாவும் ஜலகோபாலும் போட்டி போட்டுக்கொண்டு ஓடின.
வெவ்வேறு கம்பெனிகள்.
பின்னர் ஜலகோபாலுக்குப் பதில் ஸ்டேட் ஆ·ப் மெட்ராஸ் கப்பல்
ஓடியது.
ஏற்கனவே கப்பல் பிரயாணத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
இப்போது எங்களில் பலரின் வாழ்வில் ஒரு முக்கிய பங்கை வகித்த
கப்பலைப் பற்றி சொல்லப்போகிறேன்.

எஸ்.எஸ். ரஜூலா.

'எஸ்.எஸ்.ரஜூலா' எனப்படும் அந்தக்கப்பல் 1923-ஆம் ஆண்டில்
பார்க்லேய் கம்பெனி என்னும் கம்பெனியால் கட்டப்பட்டது. அப்போதே
அது இரண்டரை லட்சம் சவரன்கள் விலைக்கு வாங்கப்பட்டதாகப்
பெருமையாகச்சொல்வார்கள். அதனுடன் ரோணா என்னும் கப்பலும்
கட்டப்பட்டது. இரண்டும் அரை மில்லியன் சவரன்கள் பெறுமானம்.
இரண்டுமே 1927-ஆம் ஆண்டில் சென்னைக்கும் பினாங்குக்கும்
இடையே விடப்பட்டதாகச் சொல்வார்கள். என்னுடைய தந்தையார்
அந்தக் கப்பலில்தான் பினாங்கு மார்க்கமாக இந்தோனேசியாவிலுள்ள
மீடானுக்குச் சென்றிருக்கிறார். 1927-ஆம் ஆண்டிலிருந்து அவருடைய
டயரி மீடானில் தொடங்குகிறது.
ரஜூலாக் கப்பல் புதுக் கருக்கு அழியாமல் இருந்தபோது அதில்
பிரயாணம் செய்திருக்கிறார்.
1900-இலிருந்து இரும்புக்கப்பல்கள் ஓடிக்கொண்டுதான் இருந்தன.
ஆனால் அவை வகமாகவும் செல்லவில்லை. சிறியதாகவும் இருந்தன.

ரஜூலாவும் ரோணாவும் ஒரே சமயத்தில் கட்டப்பட்டு இரண்டும்
ஒன்றாகவே வந்து சேர்ந்தன.
அப்போது இந்தியா பிரிட்டிஷ் வசமிருந்தது. கல்கத்தாவே
இந்தியாவின் தலைநகரம். பர்மாவும் இந்தியாவுடன்தான் இருந்தது.
'ஸ்ட்ரேய்ட்ஸ் ஸெட்ல்மெண்ட்ஸ்' என்ற பெயரில் மலாயாவில் பினாங்கு,
மலாக்கா, சிங்கப்பூர் ஆகியவற்றை பிரிட்டிஷ் தம் ஆட்சியில் வைத்திருந்தது.
பின்னர் நான்கு சுல்த்தானிய மாநிலங்களைத் தன் ஆட்சியில் கொணர்ந்தது.
பின்னர் இன்னொன்றும் சேர்ந்தது. 1910-இல் மேலும் நான்கு சுல்த்தானிய
மாநிலங்கள் தாய்லந்திலிருந்து பிரிக்கப்பட்டு இணைத்துக்கொள்ளப்பட்டன.
அப்படி உருவாகியதுதான் பிரிட்டிஷ் மலாயா எனப்படுவது.
இதுபோக போர்னியோத் தீவிலுள்ள சராவாக், வடபோர்னியோ
ஆகியவையும் பிரிட்டிஷ் வசமே இருந்தன. அதற்கும் அப்பால் ஹாங்க்காங்,
ஷாங்ஹாய் ஆகியவை இருந்தன. ஹாங்காங் என்பதும் சிங்கப்பூரும்
'க்ரௌன் காலனி' என்னும் சிறப்பு அந்தஸ்த்தைப் பெற்றவை. சுலபமாகக்
கழட்டிக்கொண்டு வந்துவிடமுடியாது. அதற்கெல்லாம் ரொம்பக் குள்ளநரித்
தந்திரம் வேண்டும். ஏமாற்றவேண்டும். இரண்டகம் செய்யவேண்டும்.
இல்லையெனில் பயமுறுத்தவேண்டும்.

அந்தக் காலத்தில் 'இம்ப்பீரியல் மெயில் ஸர்வீஸ்' என்ற அரசுத் துறை
இருந்தது. உலகம் முழுவதும் செயல்பட்டு வந்தது. லண்டனிலிருந்து
பொருள்கள், கடிதங்கள், அறிக்கைகள், உத்தரவுகள் எல்லாம் கப்பல்
வழியாக வரும்.
இந்த இம்ப்பீரியல் மெயில் ஸர்வீஸில் முக்கிய அங்கமாக
விளங்கியது லண்டன் - பம்பாய், பம்பாய்-சென்னை, சென்னை-சிங்கப்பூர்,
சிங்கப்பூர்-ஹாங்காங் இணைப்பு.
பம்பாயிலிருந்து இந்தியா முழுமைக்கும் ஒரு பெரிய நெட்வர்க்
இருந்தது. அது வேறு.
கப்பல்கள் லண்டனிலிருந்து புறப்பட்டு, ஸ்பேய்னைச் சுற்றிக்
கொண்டு, ஜிப்ரால்ட்டரைத் தாண்டி, மத்தியதரைக் கடலுக்குள் பிரவேசித்து,
மால்ட்டா வந்து, அங்கிருந்து சூயெஸ் கால்வாய் வழியாக செங்கடலுக்கு
வந்து, ஏடன் துறைமுகத்தில் தங்கி, அங்கிருந்து கிஜுகிஜுவென்று
பம்பாய்க்கு வந்து சேரும்.
ஒரு மாதத்துக்கு இரண்டு முறைகள் இவ்வாறு கப்பல்கள்
லண்டனிலிருந்து வரும்.
கடிதங்கள் வகையறாக்களை ஒரு விசேஷ எக்ஸ்ப்ரெஸ் ரயில்
மூலமாகச் சென்னைக்கு அனுப்புவார்கள்.
அந்த எக்ஸ்ப்ரெஸ் ரயிலை அனுசரித்து ரஜூலா அல்லது ரோணா
சென்னையிலிருந்து புறப்படும். ஆகவே மாதத்துக்கு இரண்டு முறை
சென்னையிலிருந்து பினாங்கு/சிங்கப்பூருக்குக் கப்பல்கள் செல்லும்.

Wednesday, November 3, 2010

பழைய எலும்புக்கூடு

5 லட்சம் ஆண்டு பழைய எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

மாட்ரிட்: மனித வர்க்கத்தில் உலகில் மிகவும் முதன்மையானவர் என்று கருதப்படும் மாற்றுத் திறன் ஆணின் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஸ்பெயினின் மாட்ரிட் பல்கலைக்கழகம்,

கார்லஸ்&3 ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் இதை கண்டுபிடித்துள்ளனர்.



ஸ்பெயினில் சிமா டி லாஸ் ஹ்யூசாஸ் என்ற இடத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. எலும்புகளின் தன்மை பரிசோதிக்கப்பட்டதில் அந்த எலும்புகள் சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.



எல்விஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படிமம் இருந்த இடத்தில் மேலும் பல எலும்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். கிடைத்திருக்கும் எலும்புக்கூட்டுக்கு சொந்தக்காரர் மாற்றுத் திறனாளி, நடுத்தர வயதுக்காரர் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Wednesday, October 27, 2010

இலக்கியம்

இலக்கிய வளர்ச்சி


காலங்கள் தோறும் அமைந்த பின்புலங்களால் உருவாகிய படைப்புகள், ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு வகையான போக்கில் வளர்ந்தன.


தொடக்கக் காலத்தில், உண்ட மகிழ்ச்சி அல்லது இன்னோரன்ன மகிழ்ச்சியில் கூட்டமாக இருந்து ஓசை எழுப்பிப் பாடுவது ஒரு மரபாக இருந்தது. அவ்வாறு வாய்மொழிப் பாடல்கள் வளர்ந்தன. பின்னர்ப் பொழுதுபோக்குக் கூறாகக் கதை சொல்லுதலும், சுற்றியிருந்து அதைக் கேட்டலும் மரபாகியது. பிற்காலத்தில் காப்பியங்கள் பல தோன்றுவதற்கு அவை அடிப்படையிட்டன. உலகப் புகழ்பெற்ற ஹோமரின் (Homer) காப்பியங்கள் இலியட், ஒதீசி ஆகியவை இத்தகைய கதைகளின் வளர்ச்சி நிலை என்பர். இராமாயணக் காப்பியமும் இத்தகைய வளர்ச்சி நிலையில் தோன்றியதுதான்.


உலகக் காப்பியங்கள் பலவும் வாய்மொழிக் கதைகளின் வளர்ச்சி நிலை என்பது மில்மன் பரி (Milmen Parry) போன்ற அறிஞர்களின் கருத்து. இத்தகைய காப்பியத்தை வளர்ச்சிக் காப்பியம் (Epic of Growth) என்று குறிப்பிடுவர்.

வாய்மொழி இலக்கியம்


வாய்மொழி இலக்கியங்கள், மனனம் பண்ணுதலிலும், நினைவாற்றலிலும் சிறப்புற்றோரின் மனத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வாழ்ந்து வந்தன. செவிவழிச் செய்திகளாக இத்தகையோர் இடையே பரிமாறப்பட்டு வளர்ந்தன. வழிவழியாக வந்த கர்ண பரம்பரைக் கதைகள் என மக்களிடம் செல்வாக்குப் பெற்று வாழ்ந்தும் - வளர்ந்தும் வந்தன. இவற்றில் அவ்வப்போது செய்திகளைக் கூட்டலும் கழித்தலும் உண்டு. சுய கற்பனைக்கும் வாய்ப்புண்டு. மக்கள் ஊர் விட்டு ஊர் இடம் பெயர்ந்து செல்லும்போது வாய்மொழி இலக்கியங்களும் இடம் பெயர்ந்து சென்றன; செல்வாக்குப் பெற்றன. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும், ஓலைச் சுவடிகளிலும் பதிவு பெறும் வரையிலும் செவிவழிச் செய்திகளாகவே வாய்மொழி இலக்கியங்கள் வாழ்ந்தன. அதன் பின்னர், நவீன அறிவியல் கண்டு பிடிப்பான அச்சு இயந்திர அறிமுகத்தால் ஏற்பட்ட அச்சிடுதல் வந்த பின்னரும் (எழுத்து வடிவிற்கு வந்த பின்னரும்) வாய்மொழி இலக்கியம் நாட்டுப்புறவியலாக வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.


மகிழ்வூட்டலும் துதிபாடலும்


நிலவுடைமைச் சமுதாயத்தில் (Federal Society), முன்னர்க் குறிப்பிட்டதைப் போல, மகிழ்வூட்டலும், துதிபாடலும் பாடுபொருளாக இருந்தன. தனிநபர் வழிபாடு மிகுந்த இலக்கியங்கள் எழுந்தன. இந்தப் போக்கு முடியாட்சி மன்னர்கள் காலம் வரையிலும் தொடர்ந்தது. புறநானூற்றுப் பாடல்கள் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாய்த் திகழ்கின்றன. இத்தகைய இலக்கியங்கள் மன்னனின் ஒளி(புகழ்), ஆற்றல், ஈகை, அளி(கருணை) ஆகியவற்றைக் கொண்டாடிப் போற்றின. இதற்காக உருவானதே பாடாண் திணை என்னும் புறத்திணை. 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்பதை இலக்கியத்தின் அடிப்படையாகக் கொண்டிருந்தனர்.


காப்பியங்களின் தன்மை


முற்காலத்தில் எழுந்த காப்பியங்களில் வீரமும் இயல்பு மீறிய தன்மைகளும் போற்றப்பட்டன. பின்னர்க் கூர் அறிவு இவ்வாறு போற்றப்பட்டது. இந்த மாற்றத்தை ஒதீசி போன்ற கிரேக்கக் காப்பியங்களில் பார்க்க முடிகிறது. அதன்பின்னர்க் கூர் அறிவு தீய பாத்திரங்களின் இயல்பாகப் படைக்கப்பட்டது. நம்பமுடியாதவற்றையும், இயற்கை இகந்த நிகழ்ச்சிகளையும் (Supernatural Element) மையமாகக் கொண்டு படைக்கப்பட்டு வந்த காப்பியப் போக்கில் படிப்படியாகப் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. நமக்கோ, நம்மில் ஒருவருக்கோ நடந்தது போன்ற ஓர் உணர்வை ஊட்டுகின்ற நம்பக்கூடிய நடப்பியல் தன்மை (Realism) வாய்ந்த இலக்கியங்களை - காப்பியங்களைப் படைக்கும் போக்கு ஏற்பட்டது. அதற்குச் சிறந்த தமிழ் எடுத்துக்காட்டு சிலப்பதிகாரம். சாதாரண வாழ்வின் இயல்புகள், நடைமுறைகள் பலவற்றை இலக்கியமாக்கியிருப்பதைச் சிலம்பில் காணலாம்.


கவிதையின் செல்வாக்கு


வாய்மொழி இலக்கியத்தைக் கேட்டுச் சுவைத்து வந்த மக்கள், கவிதையையும், கவிதையில் கையாளப்பட்ட சொல்வன்மையையுமே மிகவும் உயர்வாக மதித்தனர். இன்றைக்குள்ள, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, பல்லூடக வாய்ப்புகள் இல்லாத கால கட்டத்தில், கவிதை பாடிய புலவர்களே, மக்கள் தேவைகளை நிறைவு செய்பவர்களாகத் திகழ்ந்தனர். எனவே, புலவர்கள் மக்களிடையே மிகவும் செல்வாக்குடையவர்களாக இருந்தனர்.


தொன்மைக் காலத்தில், மனிதனின் அறிவு வெளிப்பாடுகள் முழுவதும், செய்யுள் வடிவிலேயே இருந்தன. மந்திரம், மாயம், வானநூல், வரலாறு, புராணம், இயற்கையறிவு, அறிவியல் முதலிய யாவும் செய்யுள் வடிவிலேயே தோன்றின. பன்னெடுங்காலமாகச் செய்யுள் வடிவிலேயே வழங்கி வந்தன. இவைகள் அனைத்தும் இலக்கியங்கள் அல்ல எனினும் இலக்கியத்திற்குரிய வடிவில் இருந்தன. ஆகவே அந்த வடிவத்திற்குச் செல்வாக்குத் தொடர்ந்து இருந்து வந்தது. இப்போக்கு அச்சுக்கலை அறிமுகமாகி உரைநடை வளர்ச்சியடைவது வரையிலும் தொடர்ந்தது.


உரைநடையின் செல்வாக்கு


ஐரோப்பியர் வருகை தமிழ் இலக்கியத்தில் பல மாறுதல்களை நிகழ்த்தியது. குறிப்பாக உரைநடை வளர்ச்சியில் பெரும் பங்களிப்பைச் செய்தது.


வணிகத்தில் தொடங்கி, சமயம் பரப்ப முற்பட்டு, சமுதாயச் சீர்திருத்தத்தில் பங்கு கொண்டு, இலக்கியப் பணியும் செய்தவர்கள் ஐரோப்பியர்கள். அவர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட அச்சு இயந்திரம், அதன் வாயிலாக ஏற்பட்ட மாறுதல்கள் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தின. பாதுகாப்பின்றி, அழிந்தும், மறைந்தும் கொண்டிருந்த ஓலைச் சுவடியிலிருந்த இலக்கியங்களுக்குப் பாதுகாப்பும் புத்துயிரும் அளித்தது அச்சுக்கலை. அச்சடிக்கப்பட்ட நூல்கள், மேலும் பல நூல்கள் உருவாக உறுதுணையாக அமைந்தன. புதிய இலக்கிய வடிவங்கள் தோன்றுவதற்குரிய சூழலை அச்சுக்கலை ஏற்படுத்தியது. நினைவாற்றலிலே வாழ்ந்து, கற்றறிந்தோர் மனத்தில் பதிவு செய்யப்பட்ட செய்யுட்கள் செல்வாக்கு இழந்து, மக்களுக்கு எளிதில் புரியக்கூடிய - மக்களை எளிதில் சென்றடையக் கூடிய உரைநடை வளர்ச்சியடையத் தொடங்கிற்று. ஐரோப்பியர்கள் - குறிப்பாக வீரமாமுனிவர், டாக்டர் கால்டுவெல், டாக்டர் ஜி. யு. போப், சீகன் பால்கு போன்றவர்கள் தமிழ் உரை நடை வளர்ச்சிக்கு ஆற்றிய பணி மிகவும் சிறப்பானது.

இலக்கியம்

இலக்கியப் போக்கு


இலக்கியம் தோன்றுவதற்கு ஒரு பின்புலம் உண்டு என்பது பற்றியும், ஒரு படைப்பாளன் உருவாவதற்கும் பின்புலம் உண்டு என்பது பற்றியும் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த இலக்கியப் போக்குப் பற்றி இனிப் பார்ப்போம்.


நாடோடிக் கூட்டமும் இலக்கியமும்


நிலையான குடியிருப்பு அமைத்துக் கொள்ளாமல் அலைந்து திரிந்த நாடோடிக் கூட்டத்தவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், மக்களை மகிழ்வித்தலையும், பொழுது போக்குதலையும் மட்டுமே நோக்கமாகக் கொண்ட, வாய்மொழி இலக்கியங்கள் தோன்றின. அவற்றில் ஒரு படைப்புக்குரிய படைப்பாளர்கள் பலர் (Collective Authorship). கேட்பவர் எல்லோரும் நுகர்பவர்களாகப் பங்கேற்றனர் (All Listeners Are Audience). கதை சிறப்பிடம் பெற்றது. கேட்பவர்கள் இரவு நேரங்களில் தீயை மூட்டி அதைச் சுற்றி அமர்ந்து கொண்டு கேட்க, கதை சொல்லுதல் மரபாக இருந்தது. இவ்வாறு தீயைச் சுற்றி இருந்து சொன்ன கதையின் வளர்ச்சியே பியோவூல்ப் (BEOWULF) எனும் காப்பியம்.


கதை சொல்பவரின் நினைவாற்றலிலேயே இலக்கியங்கள் வாழ்ந்தன. நினைவாற்றல் மிகுந்தவன், மிகவும் மதிக்கப்பட்டான். எடுத்துரைத்தல், வருணனை போன்றவை சிறப்பிடம் பெற்றன.


நிலவுடைமையும் இலக்கியமும்


நாடோடிக் கூட்டமாக அலைந்து திரிந்த மக்கள், இது எனது அது உனது என உரிமையும் எல்லையும் வரையறை செய்த பொழுது குடியிருப்புத் தொடங்கியது. குடியிருப்பின் வளர்ச்சியாக நிலவுடைமைச் சமுதாயம் உருவாகியது. குழுத்தலைவர்கள் ஆட்சி உருவாகியது. இலக்கியத்தில் துதிபாடலும், மகிழ்வூட்டலும் பாடு பொருள்களாயின.


முடியாட்சியும் இலக்கியமும்


குழுத்தலைவர்கள் குறுநில மன்னர்களாகவும், மன்னர்களாகவும், வளர்ச்சியடைந்த, முடியாட்சி மலர்ந்த காலகட்டத்தில் துதிபாடுதலை மையமாகக் கொண்ட இலக்கியங்கள் தோன்றின. துதிபாடுதல் தன்னிகரற்ற தலைவனை உருவாக்கியது.


குடியாட்சியும் இலக்கியமும்


ஆணவப் போக்குடைய அரசர்களின் ஆட்சிக்கு எதிராகப் போர்க்குரல்கள், போராட்டங்கள் எழுந்தன. சாக்ரட்டீசு போன்ற சமூகச் சிந்தனையாளர்களின் கருத்துகள் செல்வாக்குப் பெற்றன. தட்டிக் கேட்கும் உரிமை குடியாட்சி மலர வாய்ப்பளித்தது. மன்னன் அவனைச் சுற்றியிருந்த சிறு குழுவினர் ஆகியவர்களிடமிருந்து விலகி, வாசகர் வட்டம் விரிவடைந்து கேட்போர் அல்லது படிப்போர் பொதுமக்களாயினர். அச்சு இயந்திர அறிமுகமும், உரைநடை வளர்ச்சியும், புதினம், சிறுகதை, புதுக்கவிதை போன்ற புதிய இலக்கிய வகைகள் தோன்றுவதற்குரிய புதிய சூழலை உருவாக்கின. இலக்கியம் பொதுமக்கள் உடைமைப் பொருளாகியது.


மிகச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையிலான எளிமை இலக்கியத்தில் புகுத்தப்பட்டது. பாடுபொருளும், மேல் மட்ட மக்களின் வாழ்க்கை நிலையிலிருந்து நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கைச் சிக்கல்களை - அடிமட்ட மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை வெளிப்படுத்துவனவாக அமைந்தன.

இலக்கியம்

உலக அளவில், இன்னதுதான் இலக்கியம் என்னும் வரையறை தோன்றுமுன்பு, எழுதப்பட்டவை எல்லாம் இலக்கியம் என்ற கருத்து ஒரு காலத்தில் நிலவியது. சமயம், வரலாறு, நிலவியல், மருத்துவம் முதலியவையும் இலக்கியங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஏனெனில் இவை எல்லாவற்றுக்கும் வடிவம் ஒரே மாதிரியாக இருந்தது. இவற்றிலிருந்து சமயம் சார்ந்தவற்றை மட்டும் பிரித்து, ஏனையவை இலக்கியம் என்று கூறப்பட்டன. பின்னர்க் கற்பனையும், அழகியலும் சார்ந்தவை தனியாகப் பிரிக்கப்பட்டன. கற்பனைக்கும், உணர்ச்சிக்கும் ஒரு வடிவம் கொடுக்கும் நிலை ஏற்பட்டபோது அது இலக்கியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.


இலக்கியம் பற்றி அறிஞர்கள் கருத்து


தொடக்க கால ஆங்கிலத் திறனாய்வாளர்களில் ஒருவரான, ஸ்டாப் போர்ட் புரூக் (Stopford Brooke) என்பவர், 'கூர் அறிவு படைத்த ஆண்களின் அல்லது பெண்களின் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும், நுகர்பவன் மகிழும்படி, முறைப்படுத்தி அமைப்பதே இலக்கியம்' என்று கூறினார். மேத்யூ அர்னால்ட் (Mathew Arnold) என்பவர், 'இலக்கியம், காலக்கண்ணாடி' என்றார். 'இலக்கியம் என்பது ஒரு சமுதாயத்தின் வெளிப்பாடு. சமுதாயத்தில் விளைந்து, சமுதாயத்தை இயக்க வல்லது. ஒரு சமுதாயத்தை உருவாக்கும் ஆற்றல் பெற்றது' என்று பொனால்டு (Ponald) எனும் திறனாய்வாளர் குறிப்பிடுகின்றார். மைக்கேல் பக்தின் (Michael Bukthin) எனும் உருசிய நாட்டுத் திறனாய்வாளர், 'சமுதாயம் இலக்கியத்தின் பிரதிபலிப்பு' என்று கூறுகின்றார். இலக்கிய எதேச்சதிகாரி ஜான்சன் (Johnson, The Literary Dictator) என்றும் 'அகராதி ஜான்சன்' என்றும் அழைக்கப்படுகின்ற, பேரறிஞர் டாக்டர் சாமுவேல் ஜான்சன், ‘எது இலக்கியம் இல்லை என்று கூறுவது எளிது; எது இலக்கியம் என்று உணரலாமே தவிர உணர்த்த இயலாது’ என்று குறிப்பிடுகின்றார்.


இவ்வாறு இலக்கியம் என்றால் என்ன என்பதற்குப் பல்வேறு வகையான விளக்கங்கள் அல்லது கருத்துகள் வழங்கி வருகின்றன.


தமிழ் இலக்கியம் உள்ளிட்ட உலக இலக்கியங்கள் அனைத்திலும் மேற்குறிப்பிட்ட அறிஞர்களின் கருத்துகள் செயல்படுவதைக் காணலாம்.


இலக்கியம் தோன்றும் பின்புலம்


ஒவ்வொரு செயலுக்கும் அல்லது ஒவ்வொரு வெளிப்பாட்டிற்கும் ஒரு பின்புலம் உண்டு. ஒரு தனி மனிதனின் மகிழ்ச்சிக்கும், துயரத்திற்கும் ஒரு பின்புலம் உண்டு. அதைப்போல, சமுதாயத்தின் விளைபொருளாகிய இலக்கியம் தோன்றுவதற்கும் உறுதியாக ஒரு பின்புலம் உண்டு.


பிரஞ்சுப் புரட்சியைப் பின்புலமாகக் கொண்டு, சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை என்ற செய்திகளைப் பரப்பும் நோக்கத்துடன் பல இலக்கியங்கள் தோன்றின. இந்திய நாட்டு விடுதலையைப் பின்புலமாகக் கொண்டும் பல இலக்கியங்கள் உருவாயின.


ஒரு குறிப்பிட்ட பின்புலம் அல்லது சூழல், ஒரு படைப்பு - அதாவது இலக்கியப் படைப்பு தோன்றுவதற்குரிய காரணமாக அமைகிறது. அதைப்போல, ஒரு படைப்பாளன் உருவாவதற்கும் ஒரு பின்புலம் காரணமாக அமையும். பாரதி உருவாகக் காரணமாக இருந்த சமூக, அரசியல் பின்புலங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே, பின்புலம் என்பது படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.

Thursday, October 21, 2010

புற்று நோய்

புற்று நோய் ஏதோ இனம்புரியாத இயற்கை விளைவுகளால் ஏற்படுவதல்ல மாறாக மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட அதிநவீன வாழ்வுதான் காரணம் என்று மான்செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதனின் உற்பத்தி நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள உடல்ரீதியான மாற்றங்களே சமீப புற்று நோய்க் கட்டிகளுக்குக் காரணம் என்று இவர்கள் கூறுகின்றனர்.

இதனை உறுதி செய்ய அவர்கள் எகிப்திய மம்மிக்களை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான மம்மிக்களை ஆய்வு செய்ததில் ஒரேயொரு மம்மியில் மட்டும் புற்று நோய் இருந்தது உறுதியானது.

பண்டைய எகிப்திய பிரதிகளில் காணப்படும் புற்று நோய்ப் போன்ற நோய்க்கான குறிப்புகள் அனைத்தும் குஷ்ட ரோகத்தினால் ஏற்படும் உடல் ரீதியான அறிகுறிகளை புற்று நோய் என்பதாக அது கூறியுள்ளது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வின் தலைவரான மைக்கேல் ஸிம்மர்மேன் மாம்மிக்களில் கட்டிகள் இருந்ததற்கான அடையாளம் இல்லை என்பதால் புற்று நோய் அந்தக் காலக்கட்டத்தில் இல்லை என்று கூறமுடியும் என்று கூறுகிறார்.

"இதனால் புற்ற்நோய் அல்லது புற்று நோய் உருவாக்கக் காரணிகள் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய வாழ்வு முறையே என்று நாம் கருத இடமுண்டு" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"சுற்றுசூழலில் இயற்கையாக உள்ள எந்த ஒரு கூறும் புற்று நோய்க்கு காரணமாக இருக்கவில்லை. இதனால் இது மனிதனால் ஏற்பட்டுள்ள சீரழிந்த, மாசாகிப்போன சூழ்நிலைகளால் உருவானதே" என்று நாம் கூற முடியும்." என்று சக ஆய்வாளரும் பேராசிரியருமான ரொசாலி டேவிட் கூறுகிறார்.

அதாவது எய்ட்ஸ், புற்று நோய் என்பதெல்லாம் ஆதிகாலம் தொட்டே இருந்து வருபவை என்ற பொய்யை மருத்துவ ஆய்வும் கார்ப்பரேட் ஆய்வும் கூறிவரும் இந்த நிலையில் புற்று நோய்க்கு ஒரு வரலாற்றுப் பார்வையை அளிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு காலத்தின் உடல்களை ஆய்வு செய்ததில் நவீன சமூகங்களுக்கு கிடைத்த செய்தி என்னவெனில் "புற்று நோய் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டதே" என்பதுதான் என்று இந்த ஆய்வாளர்கள் அடித்து‌க் கூறுகின்றனர்.

Template by : kendhin x-template.blogspot.com